Skip to main content

குழந்தைத் திருமணம்; இரண்டு இளைஞர்கள் போக்சோவில் கைது

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

Child marriage! Two youth arrested in POCSO!

 

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள உப்பாரஅள்ளியைச் சேர்ந்தவர் அம்முலு (18 வயது, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எஸ்.எஸ்.எல்.சி படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய தந்தை, மூன்று ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, தாயுடன் வசித்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான மொட்டையன் என்பவரின் மகன் விஜய் (25), தான் அம்முலுவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார். அம்முலுவுக்கும் அவர் மீது காதல் இருந்துள்ளது.

 

அப்போது சிறுமியின் தாயார், மகளுக்கு தற்போது 16 வயதுதான் ஆகிறது என்றும், பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த பிறகு, திருமணம் பற்றி பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதில் திருப்தி அடையாத விஜய், 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். 


இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினர். விஜய், உள்ளூரில் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது ஒருபுறம் இருக்க, அம்முலுவின் தாயாருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த பூபதி (23) என்ற வாலிபருடன் அம்முலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த அறிமுகம், அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மலர்ந்தது. 


இதையறிந்த விஜய், அப்பெண்ணை கண்டித்துள்ளார். பூபதியுடன் பழகுவதை உடனடியாக கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இனியும் விஜயுடன் சேர்ந்து வாழ விரும்பாத அம்முலு, அவரை பிரிந்து சென்று, பூபதியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஜூலை 15ம் தேதி, உப்பாரஅள்ளிக்கு வந்த பூபதி, அம்முலுவை அழைத்துக்கொண்டு ஓசூருக்குச் சென்றார். அங்குள்ள ஒரு முருகன் கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். முன்னதாக சிறுமி கழுத்தில் கிடந்த விஜய் கட்டிய தாலியை கழற்றி கோயில் உண்டியலில் போட்டுள்ளனர். 


இதையறிந்து அதிர்ச்சி அடைந்த விஜய், மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், ஓசூரில் தங்கியிருந்த பூபதி மற்றும் அம்முலுவை அழைத்து விசாரித்தனர். இதில், அம்முலுவுக்கு இன்னும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பதும், அவரிடம் காதல் வலை விரித்து பூபதியும், விஜய்யும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. சட்டப்படி இந்த திருமணமே செல்லாது என்று எச்சரித்த காவல்துறையினர், அம்முலுவிடம் வாலிபர்கள் இருவர் மீதும் புகார் எழுதி வாங்கினர். 


அந்தப் புகாரின்பேரில், குழந்தை திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வாலிபர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.