Skip to main content

துபாயில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Chief Minister MK Stalin opens Tamil Nadu Stadium in Dubai

 

துபாய் உலக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

 

அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, (H.E. Abdulla Bin Touq Al Marri) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி (H.E. Dr. Thani Bin ahmed Al Zeyoudi) ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

 

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Chief Minister MK Stalin opens Tamil Nadu Stadium in Dubai

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழ்நாடு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். 

 

சந்திப்பின் போது ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல், அமீரக அமைச்சர்களுக்கு 'Karunanidhi: A Life' என்ற புத்தகத்தை முதலமைச்சர் வழங்கினார். 

 

அதைத் தொடர்ந்து, கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரங்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், தொழில்துறை, மருத்துவம், ஜவுளி, மின்னணுவியல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை எடுத்துக் காட்டும் காட்சி படங்கள் அரங்கில் திரையிடப்பட்டுள்ளன. 

 

அரங்கினைத் திறந்து வைத்த முதலமைச்சர், தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுக்களித்தார். 

 

சார்ந்த செய்திகள்