Skip to main content

'தமிழகத்தில் ரதயாத்திரையை அனுமதிக்கக் கூடாது' -திவ்யா சத்யராஜ் எதிர்ப்பு! 

Published on 09/09/2020 | Edited on 09/09/2020
DIVYA

 

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா  நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க 'மகிழ்மதி'  என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இப்பொழுது ரதயாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. ரதயாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும், உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். 

மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்கள் உயிர் மீதும், உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில் வடமாநிலங்களில் நடத்தப்படுவது போன்றே தமிழகத்திலும் செப்டம்பர் 17ஆம் தேதி தமிழக பா.ஜ.க தலைமையில் ரத யாத்திரை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், திவ்யா சத்யராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்