சென்னை திருவிக நகர் நீலம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). ரவுடியாக வலம் வந்த இவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் திருப்போரூரில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் மாநகர பேருந்து ஒன்று துரைப்பாக்கம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் பயணம் செய்த காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் கிளாடியா என்பவரிடம் தினேஷ்குமார் தனது கூட்டாளியான ராமச்சந்திரனுடன் சேர்ந்து செல்போனை திருடி உள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் தினேஷ்குமாரை மடக்கிப் பிடித்தனர். அவரது கூட்டாளியான ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட தினேஷ்குமாரை துரைப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரிடம் திருடப்பட்ட செல்போன் தனது கூட்டாளியான ராமச்சந்திரனிடம் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தனது மனைவியை தொடர்பு கொண்டு ராமச்சந்திரனிடம் இருக்கும் செல்போனை வாங்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது மனைவியும் ராமச்சந்திரனிடம் இருந்து செல்போனை பெற்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் தினேஷ்குமாரிடம் எழுதி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீடு திரும்பிய தினேஷ்குமார் சோர்வாகக் காணப்பட்டதால் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். பின்பு கழிவறைக்குச் சென்ற தினேஷ்குமார் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் துன்புறுத்தியதால் தினேஷ்குமார் இறந்து இருக்கலாம் என திருவிக நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து எழும்பூர் 5வது குற்றவியல் மாஜிஸ்டிரேட் ஜெகதீசன், தினேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்று வந்த இளைஞர் திடீரென இறந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.