
புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை மட்டுமே கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
கரோனா பரிசோதனைக்கு தரமற்ற ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகளுக்கு தடை விதித்து, புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனை கருவிகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளும், கருவிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விற்பனைக்கான உரிமம் வழங்கப்படுகிறது.
அதேபோல, கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட்டை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள், தவறான முடிவுகளைக் காட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில், ஏப்ரல் 29-ம் தேதி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பரிசோதனை கருவிகளை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டதாக, பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.