Skip to main content

பேருந்து வழித்தட பணி ஒதுக்கீடுக்கு லஞ்ச வேட்டை; தொழிற்சங்க நிர்வாகி கைது!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Bribery for bus route assignment; Union executive arrested

 

சேலம் அருகே, குறிப்பிட்ட வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளில் பணியாற்ற லஞ்சம் வசூலித்த தொமுச நிர்வாகியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் (தொமுச) தொழிற்சங்கத் தலைவராக ஓட்டுநர் தேவராயன் உள்ளார். மேச்சேரியைச் சேர்ந்த குணசேகரன் இந்த சங்கத்தின் செயலாளராகவும், கணேசன் என்பவர் தொழில்நுட்பப்பிரிவு செயலாளராகவும் உள்ளனர். தாரமங்கலம் அருகே உள்ள கண்காணிப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், தாரமங்கலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

 

இந்நிலையில், தொடர்ந்து அந்தப் பேருந்தில் பணியாற்ற வேண்டுமானால் தனக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தில் பணி ஒதுக்கீடு செய்து விடுவேன் என்றும் பரமசிவத்தை தொமுச செயலாளர் குணசேகரன் மிரட்டியுள்ளார்.

 

அவருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத பரமசிவம், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. கிருஷ்ணராஜா, காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், முருகன் மற்றும் சக காவலர்கள் குணசேகரனை கையும் களவுமாகப் பிடிக்க பரமசிவத்திற்கு ஆலோசனை வழங்கினர். இதற்காக அவரிடம் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதனை குணசேகரனிடம் கொடுக்கும்படி கூறினர். 

 

இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு பரமசிவம், நேற்று முன்தினம் (ஜன. 10) பகல் 12.50 மணியளவில், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, குணசேகரனைச் சந்திக்கச் சென்றார். தாரமங்கலம் தெப்பக்குளம் அருகே வைத்து குணசேகரன், அந்தப்பணத்தை வாங்கினார். அப்போது, ஏற்கனவே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் குணசேகரனை கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

 

இதையடுத்து, தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து, குணசேகரன் மற்றும் தொமுச நிர்வாகிகள், பணிமனை மேலாளர் ஆகியோரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடந்தது. கைது செய்யப்பட்ட குணசேகரன், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்