Skip to main content

பெண்ணாடம் அருகே கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் அம்மன் தாலிகள் திருட்டு!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

 Breaking the temple lock near Pennadam and stealing the idol and goddess thali!

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள இறையூரில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தர்மகர்த்தாவாக இருந்து கோயிலைக் கவனித்து வருகிறார்.

 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (04.02.2021) கோயிலில் அனைத்துப் பூஜைகளையும் முடித்து இரவு கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். நேற்று (05.02.2021) காலை, கோயிலைத் திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது கோயில் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து  அப்பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலுக்குள் இருந்த 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை, பெருமாள் நெற்றியில் இருந்த கால் கிலோ எடைகொண்ட வெள்ளியிலான நாமம், மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 4 தாலிகள் (2 பவுன்) ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடுபோன ஐம்பொன் சிலை, பல லட்சங்கள் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து பெண்ணாடம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் போலீசார், திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 6 மாத காலத்தில் பெண்ணாடம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்டக் காவல்துறை நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும்  என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.