நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று புறக்கணிக்கப்பட்ட கிராம சபை கூட்டம் மீண்டும் நடைபெற்ற போது 100 நாள் வேலை பறிபோனால் எந்த புள்ள சோறு போடுவான் என்று வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு பெண்கள் கேள்வி எழுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியுடன் கொடூர் ஊராட்சியை இணைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு பறிபோகும் என்றும், கிராமப்புற விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் நிறுத்தப்படும், சொத்து வரி உயர்வு ஏற்படும் என்பதாலும் அரசாணையை திரும்ப பெறக்கோரி ஏற்கனவே அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இதே கோரிக்கையை முன்வைத்து நாட்டின் 76 வது குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் அவர்கள் புறக்கணித்து கூட்டத்திற்கு வந்த அதிகாரிகளுக்கு எதிராக அப்போது போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் வேறு வழி இன்றி அன்றைய தினம் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை கொண்டு வந்து காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த கூட்டத்தை பார்வையிடுவதற்காக வந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜனை முற்றுகையிட்ட பெண்கள் 100 நாள் வேலை பறி போனால் எந்த பிள்ளை எங்களுக்கு சோறு போடுவான் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.