Skip to main content

தி.க கூட்டத்தில் பாஜக கல்வீச்சு; நாற்காலி உடைப்பு, சாலைமறியல் - கடையடைப்பு பதற்றம்

Published on 16/04/2018 | Edited on 16/04/2018
thiruma in

 

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் திராவிட கழக பொதுக்கூட்டம்  மாலை தொடங்கி நடைபெற்றது . இந்த பொதுக்கூட்டத்திற்கு மண்டலத்தலைவர் இராவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது உறுப்பினர்கள் பேசுகையில் சாமி,கடவுள் கிடையாது என பேசிக் கொண்டிருந்த போது  கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன்மாஹாதேவிபட்டினம், உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி .பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்ட வளாகத்தில் ஒன்று கூடி இந்து மதத்தை இழிவாக பேசியதாக கூறி அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை உடைத்தனர்.

 

 கூட்டத்தில் கற்களையும் வீசியுள்ளனர்.  அதனால் திராவிட கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த பலரும் மறியலில் கலந்து கொண்டனர்.

 

அப்போது கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். உடனே அங்கு வந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ் மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இந்த திடீர் கலவரத்தால் கட்டுமாவடி கடைவீதியில் பதற்றம் ஏற்பட்டு அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது .
   ஆனால் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாக நின்றவர்களின்  அப்பகுதியை சேர்ந்த
 பல வீடுகளிலும் இரவிலும் கல்வீச்சு நடப்பதாக கூறப்படுகிறது.


    சனிக்கிழமை பொன்னமராவதியில் எச்.ராஜா வந்த போது கருப்பு கொடி காட்டியதால் திருமாவளவன் படத்தை எரிக்க பாஜக வினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சம்பவமாக கட்டுமாவடி பற்றிக் கொண்டது.
  

சார்ந்த செய்திகள்

 

Next Story

மூன்றாவது முறையாக நிறைவேறிய சட்ட மசோதா; மோடிக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Bill passed for the third time; CM again letter to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

 

Next Story

“பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும்” - தொல்.திருமாவளவன் எம்.பி.,

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
 thol thirumavalavan speech about VIT Viswanathan

கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்கா, நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்ட்டது. இதற்காக தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் தொல்.திருமாவளவன் பேசுகையில் “அண்ணன் விஐடி நிறுவனர், வேந்தர், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பொறுப்புணர்வோடு பணியாற்றி வருகிறார் என்பதை நாமும், நாடும் அறியும். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட அறிஞர். பெரியார், அண்ணா போன்றோரால் ஈர்க்கப்பட்ட, சமூக நீதி அரசியலையும், தமிழ் இயக்கத்தையும் உறுதியாக பாதுகாத்து வருபவர். இன்று அவர் ஒரு கல்வி தந்தையாக அறியப்பட்டாலும், அரசியலில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்பதை எனது பார்வையில் மேலோங்கி நிற்பதாக நினைக்கிறேன். 

வெறும் வேடிக்கை பார்க்காமல், மொழி உணர்வு, இன உணர்வு பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கு பணியாற்றக் கூடியவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அதனால்தான் தமிழ் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழ் தேசிய களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அனைவரையும் ஒன்றினைப்பதற்கான பணியைச் செய்து வருகிறார். கட்சி அடிப்படையில் பலர் சிதறி கடந்தாலும், அனைவரையும் ஒரு மேடையில் இணைப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் பெரியார் அரசியலுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், இங்கு காலூன்ற பார்க்கிறார்கள், அவர்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, என்று சொன்னார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, ஆபத்தில் முடிந்துவிடும், பெரியாரின் கருத்துக்கும் பேராபத்தாக முடிந்துவிடும், என்று சொன்னவர். அதற்கான பல விசயங்களை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். அவரது அனுபவங்களைச் சொன்னார். மக்கள் நலக்கூட்டணி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யுங்கள், வாக்கு சிதறி விடக்கூடாது, என்றார். இதை அவர் சொல்லியிருக்க தேவையில்லை. அவர் திமுக மற்றும் அதிமுக-வுக்காக பணியாற்றவில்லை. அவரது கவலை என்னவென்றால், தமிழகத்தில் தமிழ் அரசியலுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றி விடுவார்களோ என்ற கவலை. சனாதான சக்திகள் இங்கு வந்துவிடுவார்களோ, என்ற கவலை அவருக்கு. அவர் சொன்னது பற்றிப் பலமுறை பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு காவிரி நீர் பிரச்சனைக்கு இன்றைய தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி  தலைவர் அண்ணன் ஸ்டாலின் அழைத்த போது, எந்தவித ஆச்சரியமும் இன்றி அவருடன் கைகோர்த்தோம், இன்று தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு பல வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்கள். 

அவரது அரசியல் என்பது, மாநில உரிமைகள் பறிபோகக் கூடாது, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது, என்ற புரிதல், அந்தத் தெளிவு, அந்தப் பொறுப்புணர்வு அண்ணன் இடத்தில் மேலோங்கி இருப்பதை நான் பார்க்கிறேன். கல்வியை வணிகமாக பார்க்காமல், அதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும், சாதி கொடுமைகளில் இருந்து மக்களை மீட்க முடியும், என்ற புரிதல். உயர் கல்வியில் சாதனைப் படைத்திருக்கிறார் என்பதால்தான் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியில் 27 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்தில் இருக்கிரது. இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது, விஐடி யும் சேர்ந்து செய்திருக்கிறது, என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து படிக்கிறார்கள், அதற்குக் காரணம், தரமான கல்வி வழங்குவதுதான். அதனால்தான் இப்படி ஒரு சிறப்பான பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

இதைத் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் எங்கே இருக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு அண்ணனின் அருமை தெரிந்திருக்கிறது. அவருக்கு இந்தக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்கள், கல்வி தளத்தில் ஆற்றி வருகின்ற பணிகள் பாராட்டுக்குரியவை, போற்றக்கூடியவை என்றாலும், தமிழுக்காகவும், தமிழ் தேசியத்திற்கும் அவர் ஆற்றிக்கொண்டிருக்கின்ற பணிகள் மேலும் சிறப்பானவை. எங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் அண்ணன் வழியில் பணியாற்றி வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசியத்திற்காக பணியாற்றி வரும் கட்சி என்பதால்தான் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்து பாராட்டினார். அதற்காக இந்த நேரத்தில் அண்ணன் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முன்னெடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்று சொல்லி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார்.