
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 6-ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக திருச்சியில், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்பொழுது,
''தமிழகத்தில் வேல் யாத்திரையால் மாபெரும் புரட்சி எழுந்துள்ளது. வேல் யாத்திரையின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசு தைப்பூசத் திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இத்திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. வேல் யாத்திரை திராவிடக் கட்சிகளின் பொய்களையும், அவர்களின் பொய் முகத்திரைகளையும் கிழித்து, மாபெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
திமுக தலைவர் கலைஞர் சட்டமன்றம் கட்டுவதற்கு பல்லாயிரம் கோடி செலவிட்டபோது பேசாத ஸ்டாலின், தற்போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட நிதி ஒதுக்கியுள்ளதை விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும் ஏன்?
வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி பாஜக மாநில இளைஞரணி சார்பாக 'இளைஞர் எழுச்சி மாநாடு' நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறேன். இளைஞர்களை ஒன்றுசேர்த்து பாஜகவின் சாதனைகளை தேர்தல் பிரச்சாரமாக நடத்த உள்ளோம். இந்த இளைஞரணி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பு அழைப்பாளராக அழைக்க இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.