தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையிலிருந்து குண்டாறு அணைக்குச் செல்கிற வழியில் இருக்கிறது இரட்டைக்குளம் கிராமம். இதன் கரையில் அமைந்துள்ள சிறிய சக்தி விநாயகர் கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமை இரண்டு நாட்களில் மட்டும் காலை மாலை என்று இரு வேளைகளிலும் பூஜை நடக்கிறது. இந்த நாட்கள் தவிர்த்து வாரத்தின் 5 நாட்களிலும் அந்தக் காட்டுப் பகுதியின் காகம் ஒன்று காலை 7 மணிக்கும் மாலை 5 மணிக்கும் வந்து கோவிலின் முன்பு உள்ள மணியை சுமார் 5 நிமிடம் பூஜையாக அடித்துவிட்டுச் செல்கிறது. இந்த சம்பவம் கடந்த மூன்று மாதமாக தினமும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது. நேரம் தவறாமல் காகம் வந்து விநாயகருக்கு மணியடிக்கிறது.
பக்தியால் விநாயகருக்கு காகம் இருவேளையும் மணியடித்துவிட்டுச் செல்கிறதாக இந்த சம்பவத்தைக் கவனித்துவிட்ட அந்தப் பகுதியில் டீ கடை நடத்தி வருகிற சசிகுமார் அதிசயம் மேலிட, ''இதை நாங்கள் உன்னிப்பாக கவனிக்காமலிருந்தோம். சக்தி விநாயகர் கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பூஜை நடப்பதால் அன்றைய தினம் மட்டும் காகம் வராது. தற்செயலாக கவனித்துவிட்ட நாங்கள் தொடர்ந்து கவனித்த போது தான் பூஜை நாட்கள் தவிர்த்து மற்ற 5 நாட்களும் தவறாது காலை மாலை வந்து காகம் மணியடித்துவிட்டுச் செல்வதைக் கவனித்தோம். எங்களுக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கு. மூன்று மாதமாக ஒரு பறவை இறை பக்தியால் மணியடித்து விட்டுச் செல்வதை இந்தப் பகுதி மக்கள் கூட்டமாக வந்து அதிசய காகத்தைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்'' என்றார்.