Skip to main content

அழகான குடும்பத்தை அழித்த 'குடி'யின் கொடூரம்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

tasmac

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது திருவதிகை. இங்குள்ள எஸ்.கே.வி. நகரில் வசித்து வந்தவர் 31 வயது சிவக்குமார். இவர் கோயில்களில் சிலைகள் செய்யும் சிற்பக் கலைஞர். இவரின் மனைவி 24 வயது சரண்யா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 வயதில் விக்னேஷ், மூன்று வயது தினேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

கடந்த சில ஆண்டுகளாகவே சிவகுமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அருமையான தொழில், நல்ல வருமானம், அதை எப்போதும் மது போதையிலேயே செலவழித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. குடியை விட்டுவிடுமாறு அவரது மனைவி சரண்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை, சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் சிவக்குமார் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து குடிப்பதற்காக மது பாட்டிலை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்த வமனைவி சரண்யா கணவரைக் கண்டித்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்துடன் சிவகுமார் வீட்டுக்கு வெளியே வந்து அமர்ந்திருந்தார். கணவர் சம்பாதிக்கும் பணத்தைக் குடியிலே செலவழித்து வருவது சரண்யாவை மிகவும் வருத்தமடையச் செய்தது. இனி இவர் திருந்த மாட்டார் என எண்ணி மனமுடைந்த சரண்யா வீட்டுக்குள் தூக்குமாட்டி தொங்கினார்.

 

தற்செயலாக வீட்டுக்குள் சென்ற சிவகுமார் சரண்யாவின் நிலையைப் பார்த்து கதறி அழுதுள்ளார். இவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர்கள் உதவியுடன் சரண்யாவை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சிவகுமார் தனது குடியினால் தான் மனைவியை இழந்து விட்டோம் என்று வேதனைப்பட்ட அவர் மனைவி சரண்யாவின் சேலையை எடுத்து அதில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

 

http://onelink.to/nknapp

 

பின்னர் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடிப்பழக்கத்தால் மனைவியும் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவர்களது இரு குழந்தைகளின் எதிர்காலம் கருதி அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். குடி குடியைக் கெடுக்கும் குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். அதோடு நல்ல குடும்பத்தையும் கெடுக்கும் இதை அரசாங்கம் எப்போதுதான் உணர போகிறதோ? மதுவுக்கு எப்போதுதான் தடை போடுமோ? எனக் குடும்பப் பெண்கள் ஆதங்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.