Skip to main content

“350 வருமானவரிச் சோதனைகள் செய்திருக்கிறேன்..” - ஐஆர்எஸ் அதிகாரி ரெங்கராஜ்  

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Awareness speech by IRS officer Rengaraj among students

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போட்டித் தேர்வுகள் குறித்த தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி. சின்னச்சாமி, பொருளாளர் ராமன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து ஐஆர்எஸ் ஆகி முதன்மை வருமானவரி ஆணையர் - கூடுதல் செயலாளர் ந.ரெங்கராஜ் கலந்து கொண்டு தன்னம்பிக்கை விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே 50 வீடுகள் மட்டுமே உள்ள போரம் கிராமம் எனது சொந்த ஊர். அந்த ஊரில் 2 பேர் மட்டுமே அரசு வேலை பார்த்தனர். அதில் ஒருவர் 3ம் வகுப்பு மட்டுமே படித்த எனது தந்தை. முதலில் வாச்சுமேனாக ரூ. 50 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து பியூனாக ரூ. 600 சம்பளம் வாங்கினார். ரோடு, மின்சாரம் வசதி இல்லாத கிராமம். எனது தந்தை வேலைக்காக கீரமங்கலம் வந்து தங்கிய போது கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1981-1983ல் படிச்சேன். அறிவியல் பாடப்பிரிவு கேட்டேன். உனக்கு அறிவியல் பாடம் கொடுக்க முடியாது, கணக்கும் வராது என்று சொன்னார் தலைமை ஆசிரியர் பச்சையப்பன். வணிகவியல் பிரிவு தான் கிடைத்தது. அப்போது ஒரு ஆசிரியர் இனிமேல் அரசு வேலைக்கு போட்டித் தேர்வுகள் தான் எழுத வேண்டும் என்று சொன்னார்.

 

கிடைத்த வணிகவியல் பாடப்பிரிவில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற நான் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பி.காம் சேர்ந்து படித்த போது முதலாம் ஆண்டிலேயே எஸ்.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். டெல்லியில் வேலை. ஆனால் என் தந்தை டிகிரியை முடிச்சுட்டு பெரிய வேலைக்கு போ என்றார். அதனால் அந்த வேலையை வேண்டாம் என்றேன். அதன் பிறகு ரயில்வே, அஞ்சல் துறை, இன்சூரன்ஸ் நிறுவனம் என பல நிறுவனங்களிலும் வேலைக்கான தேர்வெழுதி தேர்வாகி வேலைக்கு போகவில்லை. தொடர்ந்து எம்.காம் முடித்து எம்ஃபில் சேர முயன்றபோது வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

அதன் பிறகு தான் யூபிஎஸ்சி க்கான தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாணவர் தேர்வுக்காக அரசு பயிற்சிக்கு விண்ணப்பம் செய்தேன். 2 ஆயிரம் பேரில் 5வது ஆளாகத் தேர்வாகி சென்னையில் பயிற்சி பெற்று வாராந்திரத் தேர்வுகளில் நல்ல முறையில் தேர்வானதால் பயிற்சியாளர்கள் என்மீது அக்கறை கொண்டனர். 5 லட்சம் பேர் எழுதி யூபிஎஸ்சி தேர்வில் 11 ஆயிரம் பேர் தேர்வானதில் நானும் ஒருவன். தொடர்ந்து எனக்கு 1991ல் ஐ.ஆர்.எஸ் கிடைக்கிறது. மாவட்டத்தில் நான் முதல் ஐஆர்எஸ் என்ற சிறப்பும் கிடைத்தது. எல்லாமே முதல் முயற்சியிலேயே முடிந்தது. இன்று உயர்ந்த இடத்தில் அதிகபட்ச சம்பளம் வாங்குகிறேன். இதுவரை 350 வருமானவரித்துறைச் சோதனைகள் செய்திருக்கிறேன். 12 மாவட்டத்துக்கு அதிகாரி. ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டிக் கொடுக்க வேண்டும். பெரிதாக ஆசைப்படுங்கள். இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள். தினசரி செய்தித் தாள்கள் ரொம்ப அவசியம் படிக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி உங்கள் கவனத்தை திசை திருப்பிவிடும் கவனமாக இருக்க வேண்டும்.

 

அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு போயிருந்த போது, உல்பா பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் இருந்து மீண்டேன். அதே போல 1997ல் ஒரு வீட்டில் ரைடுக்கு போன போது, மேல் மாடியிலிருந்து ஒருவன் ஒரு பெரிய சூட்கேசை தூக்கி வெளியே போட முயன்றபோது அதை ஏணி வைத்து ஏறி உள்ளே தள்ளிவிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் துப்பாக்கியோடு நின்றான். அதனை சமாளிக்க எங்கள் கையில் இருந்த பெட்டியை தூக்கி வீசி கவனத்தை திசை திருப்பி உள்ளே நுழைந்து ரூ.2.50 கோடியை மீட்டோம்.

 

ஒவ்வொரு முறையும் நாம் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்று வருந்தக் கூடாது. எனக்கு அறிவியல் பாடப்பிரிவு கிடைத்திருந்தால் நான் மருத்துவம் படிக்க போய் இருக்கலாம். முதல் போட்டித் தேர்வில் தேர்வானதும் கிளர்க் வேலைக்கு போய் இருந்தால் இன்று இந்த உயர்ந்த பதவிக்கு வந்திருக்க முடியாது. சில நேரங்களில் நினைத்தது கிடைக்கவில்லை என்பதும் நல்லதுக்கே என்று நினைக்கிறேன். ஆகவே ஆசைப்படுவதை பெரிதாக ஆசைப்படுங்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.