Skip to main content

வீடியோ ஆதாரத்துடன் நக்கீரன் அம்பலப்படுத்திய மோசடி!  விஜயநல்லதம்பி கைது!    

Published on 02/07/2023 | Edited on 02/07/2023

 

Arrested person who defrauded Rs 3.5 lakh by claiming to buy food jobs

 

பலரிடம் பண மோசடி செய்வது, மோசடி புகாருக்கு ஆளாகி கைதாவது, பிறர்  மீது மோசடி புகார் தருவதெல்லாம் விஜயநல்லதம்பி வாழ்க்கையில்  வாடிக்கையாக நடந்துவருவதுதான். தற்போது சத்துணவு வேலை வாங்கித்  தருவதாக ரூ.3.5 லட்சம் மோசடி செய்த புகாரில் கைதாகியிருக்கிறார்  விஜயநல்லதம்பி.   

 

விஜயநல்லதம்பி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி என்பதும்,  தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்  ரவிச்சந்திரனின் தம்பி என்பதும் தெரிந்ததே. மேலும் இவர்,  பஞ்சாயத்து  தலைவர், யூனியன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்,  அதிமுக  வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.  விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராகவும்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அரசு  வழக்குரைஞராகவும் இருந்துள்ளார்.   இப்படியொரு அழுத்தமான பின்னணி உள்ளவர் என்பதால், எத்தனை மோசடி  புகார்கள் வந்தாலும், விஜயநல்லதம்பி விஷயத்தில் காவல்துறை அத்தனை  கடுமை காட்டுவதில்லை. மேலும், நீதித்துறை வட்டாரத்தில் பெரிய அளவில்  முன்பிருந்த பழக்கத்தின் காரணமாக, விஜயநல்லதம்பியை காவல்துறை நெருங்குவதற்கு முன்பாகவே, அவருக்கு தகவல் போய்விடும் என்று கூறப்படுகிறது.   

 

கடந்த 2022ல், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் விஜயநல்லதம்பி, தன்  அண்ணன் ரவிச்சந்திரன் மீது மோசடி புகார் அளித்திருந்தார். அதில், அரசு  வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7 பேரிடம் ரூ.68 லட்சத்தை வாங்கி,  ரவிச்சந்திரன் ஏமாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.  ஏமாற்றப்பட்ட 7  பேரும் விஜயநல்லதம்பிதான் எங்களிடம் வேலை வாங்கித் தருவதாகப்  பணம் வாங்கினார் என்று கூறிவிட, அது விஜயநல்லதம்பி அளித்த பொய்ப்புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது.   தன்னிடம் டிரைவராக வேலைபார்த்த தங்கதுரையின் மனைவி  கிருஷ்ணவேணிக்கு சத்துணவு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.5  லட்சத்தை வாங்கிய விஜயநல்லதம்பி ஏமாற்றியதோடு, கொலை மிரட்டலும்  விடுத்தார். கடந்த 1-10-2020 அன்று விஜயநல்லதம்பியிடம் ரூ.3.5 லட்சத்தைக் கொடுத்தபோது, கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், ரகசியமாகத் தனது  செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார்.    

 

கடந்த 20-8-2020 அன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கிருஷ்ணவேணி  அளித்த புகார் மீதான விசாரணையைத் தொடர்ந்து, விஜயநல்லதம்பி மீது  பண மோசடி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு  பிரிவுகளில் வழக்கு பதிவானது. மேலும் பலர் விஜயநல்லதம்பி மீது புகார்  அளித்திருக்கும் நிலையில், விஜயநல்லதம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

கிருஷ்ணவேணி தரப்பிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி  விஜயநல்லதம்பி பணம் பெற்றுக்கொண்ட வீடியோ பதிவை,  முதன்முதலில்  3-12-2022ல்   ‘அரசு வேலை மோசடி; அதிமுக ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ  ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி’ என்னும் தலைப்பில் வெளியிட்டு, அந்த  மோசடியை அம்பலப்படுத்தியது நக்கீரன் இணையதளம்.   ரூ.3 கோடி பண மோசடி புகாரில் கைதாகி நிபந்தனை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவர் மீது  மோசடி புகார் அளித்தது விஜயநல்லதம்பிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.