Skip to main content

'அம்மாவ பாத்துக்கோ... அக்காவ அழ வேணாம்னு சொல்லு' - இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
'Ammava bathuko... Akkava ala venam sollu'- the young man's pathetic decision

தன்னுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மாலத்தீவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தற்கொலை முடிவுக்காக அவர் நண்பர்களுக்கு அனுப்பியுள்ள உருக்கமான ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி பூங்கொடி இவர்களுக்கு. ராஜேஷ் (31) என்ற மகன் இருந்தார். இவர் மாலத்தீவில் இன்ஜினியராக பணியில் இருந்தார். ராஜேஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த பெற்றோர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடத்தியிருந்தனர். திருமணத்திற்கான அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி ராஜேஷ் - புவனேஸ்வரிக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக விடுமுறை வேண்டும் என்பதால் மாலத்தீவு சென்று பணியாற்றும் நிறுவனத்தில் விடுமுறை கேட்டுவிட்டு வருவதாக ராஜேஷ் மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவுக்கு சென்றதால் புவனேஸ்வரியும் ராஜேசும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி செல்போனில் ராஜேஷை தொடர்பு கொண்ட புவனேஸ்வரி 'நான் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலித்து வந்தேன். அவர் தனக்கு தொல்லை கொடுக்கிறார். எனவே நான் இல்லை என்றாலும் நீங்கள் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என அழுதபடி கூறியுள்ளார். இது ராஜேஷிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், புவனேஸ்வரி சொன்ன இந்த தகவல் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அதே நேரம் புவனேஸ்வரி வேறொருவருடன் திருமணம் செய்து கொண்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அந்த இளைஞர் வெளியிட்டுள்ள ஆடியோவில், 'காலையிலிருந்து அவங்க வீட்டில் இருக்கிறவர்களுக்கு போன் பண்றேன் யாரும் எடுக்கல. இன்னைக்கு காலையில கேட்டா கல்யாணம் வேற ஒரு பையனோட முடிஞ்சிருச்சுன்னு சொல்றாங்க. என்னால முடியல மச்சான். என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரியல. இதுல இருந்து எப்படி மீண்டு வர போறேன்னு தெரியல. அம்மாவ பாத்துக்கோ.. அக்காவ அழுவ வேணான்னு சொல்லு. எங்க அப்பாவோட மானம் தான் முக்கியமா இருக்குது. அதை விட பெருசா எதுவும் தெரியல. என்னால் முடியல' என பேசிய அந்த வாட்ஸ் ஆப் ஆடியோ இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய மாலத்தீவு போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு இந்திய தூதரகத்திடம் உடலை ஒப்படைத்தனர். இதனையடுத்து ராஜேஷின் உடல் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு பின்னர் மேல்மலையனூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் அவரது உடலை கண்டு கதறி துடித்த காட்சிகள் கண்ணீரை வரவழைத்தது. இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.