
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் படத்துடன் செய்தி வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் காவல் நிலையத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் மற்றும் கட்சியினர் புகார் ஒன்று அளித்துள்ளார்கள். அதில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா நிர்வகித்து வரும் திமுகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஐ.டி விங் சமூக வலைதள பக்கத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு அவர் கண்ணியத்தையும் மற்றும் அவரின் மாண்பையும் பதவியையும் கீழ்தரமாக சித்தரிக்கும் வகையில் அருவருக்கத்தக்க மற்றும் ஆபாசமான அரை நிர்வாண கோலத்தில் இருக்கக்கூடிய கேலிச்சித்திரத்தை பொய்யான செய்தியுடன் இணைத்துப் பதிவிட்டுள்ளனர்.
இந்த பொய் செய்தி மற்றும் ஆபாச கேலிச்சித்திரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவமதிக்கும் வகையில் அவரை பின்பற்றும் கழகத் தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் புண்படுத்தும் வகையிலும் அவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த திட்டமிட்ட சதி செயலாக உள்ளது.மேலும் கட்சியின் அடையாளமான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் போற்றப்பட்டு கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிது மதிக்கக் கூடிய அதிமுகவின் கட்சிக் கொடியினை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறாக பயன்படுத்தி கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய செயல்கள் அரசியல் கட்சி தொண்டர்களிடையே வெறுப்பு மற்றும் மோதல் போக்கை தூண்டும் வகையில் அதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் வகையில் உள்ளது. எனவே இதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த டிஆர்பி ராஜா மற்றும் அதனைப் பகிர்ந்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதனை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.