Skip to main content

இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை! -தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Action against officials who take bribes to issue e-pass! -High Court advice to the Government of Tamil Nadu!

 

இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்ட விரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12-ஆம் வகுப்பு மாணவிகளை மீட்கக்கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ்த் தேசிய மக்கள் கட்சித் தலைவர் சி.எம்.சிவபாபு தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று, இ-பாஸ்கள் வழங்குவதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

மேலும், கரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும்,  நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை,  குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா எனக் கண்காணிக்க, திடீர் சோதனைகள் நடத்த, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்