கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். உற்சாகமாக பள்ளிக்கு திரும்பிய மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியைகள் மலர் கொத்து தந்து அன்புடன் உற்சாகமாக வரவேற்றார்கள். நன்றாக படித்து 100% தேர்ச்சி பெற வேண்டும் என்று மாணவிகளை ஆசிரியர்கள் வாழ்த்தி வகுப்பறைக்கு அனுப்பினார்கள்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் பழனி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகன் கிருத்திக் (13) காந்திநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலை பள்ளிக்குச் சென்று மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரது தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவரது தாயார் மாடு மேய்க்க சென்று உள்ளார். அவனது சகோதரர்கள் இருவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மாலை வீட்டுக்கு வந்து அவரது தாயார், வீட்டில் தனியாக இருந்த கிருத்திக் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல்லிட்டுள்ளார். அவரின் கதறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடல் கூறு ஆய்வுக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஸ்கூல் பேக் வாங்கித்தரவில்லை எனச் சிறுவன் விரக்தியில் இருந்ததாக தெரியவந்தது. இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஸ்கூல் பேக் வாங்கி தரவில்லை எனக் கூறி எட்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.