Skip to main content

மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

ோே

 

2022ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. தற்போது கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளியாகிவந்தது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது தொடர்பாக முக்கிய தகவலைக் கூறினார்.

 

அதன்படி வரும் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பேரவைத் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாகவும், காகிதம் இன்றி அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மூலமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆளுநர் உரை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக ஆளுநரின் செயல்பாடு; ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கேள்வி!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
 Function of Governor of Tamil Nadu; Cinematographer PC Sriram Question!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (12.02.2024) காலை சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல., ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ’மன்னிக்க வேண்டும் ஆர்.என்.ரவி சார், உங்களது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஏன் ஆளுநர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது. ஏற்கெனவே ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அதிருப்தி பதிவுகளை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஜார்க்கண்ட் மாநில அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Vote of confidence on Jharkhand state government today

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைடுத்து ஜார்கண்ட் மாநில அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை  தொடர்ந்து ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (05.02.2024) சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் கூட உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில் ஒரு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. 

Vote of confidence on Jharkhand state government today

தற்போது 80 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 உறுப்பினர்களும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 16  உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் தலா ஒரு உறுப்பினர்களும் என ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசுக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே சம்பாய் சோரனுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது. அதே சமயம் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் குதிரைப் பேரத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் இருந்து நேற்று (04.02.2024) ராஞ்சி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.