Skip to main content

7 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்; 3 பேர் கைது

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

 7 tons of ration rice seized with mini truck; 3 people arrested

 

சேலத்தில், வெளிமாநிலத்திற்கு கடத்திச் செல்ல இருந்த 7 டன் ரேஷன் அரிசியை மினி லாரியுடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் பள்ளப்பட்டி, சூரமங்கலம், ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து காவல்துறையினர், அப்பகுதிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஜாகீர் ரெட்டிப்பட்டி அம்பேத்கர் தெருவில் சிலர் மினி லாரியில் ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

 

காவல்துறையினர் அவர்களை நெருங்கி வருவதை பார்த்ததும், அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து கடத்தலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த சூரமங்கலம் காவல்துறையினர், அவற்றை சேலம் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில், சேலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட முயன்றதாக ரெட்டிப்பட்டி டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்த ராமஜெயம் (51), பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த லட்சுமணன் (26), ஓமலூர் செல்லப்பிள்ளைக்குட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (43) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

 

இவர்கள், ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை கிலோ 2 முதல் 5 ரூபாய் வரை விலைக்கு வாங்கி, அதை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.