Skip to main content

ஜவுளி நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு; சிசிடிவி கேமராவில் சிக்கிய முக்கிய தடயம்! 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

50 pound jewelry theft from  home textile yarn dealer caught on CCTV camera

 

சேலத்தில், ஜவுளி நூல் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 50 பவுன் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பாக, சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்தபோது முக்கிய தடயம் சிக்கியுள்ளதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.    

 

சேலம் மறவனேரி சின்னையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (66). ஜவுளி நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (62). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி அம்மாபேட்டையில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இதையடுத்து திருநாவுக்கரசும் அவருடைய மனைவியும் மட்டும் மறவனேரியில் தனியாக வசித்து வருகின்றனர். மே 31 ஆம் தேதி மாலை தனது இளைய மகன் பிரவீன்குமாரின் மனைவியுடைய தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சூரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு தம்பதியினர் சென்று இருந்தனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அணிந்து சென்ற நகைகளை, மல்லிகா கழற்றி நகைப்பெட்டியில் போட்டு, அதை டிரஸ்ஸிங் மேஜை மீது வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில், வீட்டிற்குள் பொருள்களை உருட்டும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட கணவன், மனைவி இருவரும் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது டிரஸ்ஸிங் மேஜை மீது வைத்திருந்த  நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் கத்திக் கூச்சல் போட்டனர்.  

 

இதுகுறித்து தங்கள் மகன்களுக்கும் தகவல் அளித்தனர். அவர்களும் வீட்டிற்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை துணை ஆணையர் கவுதம் கோயல், உதவி ஆணையர்கள் சரவணகுமார், அசோகன், காவல் ஆய்வாளர் பால்ராஜ், காவலர்கள் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். மல்லிகா, நகைப் பெட்டிக்குள் வைத்த 50 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், இரும்பு கம்பி கதவு, மரக்கதவு ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து  அறைக்குள் நுழைந்துள்ளனர். படுக்கை அறையின் டிரஸ்ஸிங் மேஜை மீது நகைப்பெட்டிக்குள் நகைகள் அனைத்தும் இருந்தது அவர்களுக்கு வசதியாக போய்விடவே, அதை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். அதேநேரம், பீரோவுக்குள் வைத்திருந்த நகைகள் அப்படியே பாதுகாப்பாக இருந்தது. தம்பதியை பார்த்ததும் மர்ம கும்பல் கைக்குக் கிடைத்த நகைப்பெட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

 

சம்பவத்தன்று மாலையில் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால், இரவிலும் யாரும் வர மாட்டார்கள் என மர்ம நபர்கள் கருதி, வீட்டிற்குள்  புகுந்திருக்கலாம் என்றும், ஆனால் எதிர்பாராத விதமாக தம்பதியினர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர்கள் எழுந்து  வந்துவிட்டதையும் பார்த்ததால் திருடர்கள் கையில் கிடைத்த நகைப்பெட்டியுடன் தப்பியிருக்கலாம் எனவும் காவல்துறை கருதுகிறது. தடயவியல் நிபுணர்கள், திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களைப் பதிவு செய்தனர். கிடைத்த தடயங்களின் அடிப்படையில் இந்த  சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த வீட்டுக்கு எதிரில் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் அருகில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் அந்த வீட்டுக்குள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.