Skip to main content

ஒரே நாளில் 30பேர் கைது... போலீஸ் அதிரடியால் குட்கா விற்பனைக்கு கடிவாளம்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

30 arrested in one day
                                                                        சசிமோகன்

 

ஈரோட்டில் நொச்சிக்காட்டுவலசு என்ற பகுதியில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக டவுன் போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் அந்த நொச்சிக்காட்டுவலசு பகுதியில் வீடு வீடாகச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில்  தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வீட்டிலிருந்தவரை விசாரித்தபோது அவர் பெயர் நாட்ராயன்(39) என்பதும் அவர் குட்காவை வெளி மாவட்டத்திலிருந்து வாங்கி வந்து அதை ஈரோட்டில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நாட்ராயனை கைது செய்தனர்.

 

மேலும் அவரிடம் இருந்து 350 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 3.50 லட்சமாகும். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எங்கிருந்து குட்கா வாங்கினார். அதை யார் யாருக்கெல்லாம் விற்பனை  செய்து வந்தார் என்பது குறித்தும் விசாரணைகள் தொடர்கிறது. இதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீஸார் 18 ந் தேதி தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளிலும் போலீஸார் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கொண்டு வருபவர்கள், அதனைப் பதுக்கி  அதிக விலைக்கு விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

 

ஈரோடு மாவட்டம் முழுவதும் அந்தந்த டி.எஸ்.பி.க்கள்  மேற்பார்வையில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். ஈரோடு பவானி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீஸார் மேட்டூர்-பவானி ரோட்டில், சித்தார் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது வேனில் தடை செய்யப்பட்ட 86 கிலோ எடை உள்ள புகையிலை பொருட்கள் பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்குக் கடத்தி விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பவானி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், பவானி சேர்ந்த முனுசாமி, ரத்தின பாண்டியன், ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் வீரப்பன் சத்திரம் போலீஸார் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதில் 2050 கிராம் குட்கா பான்மசாலா புகையிலை பொருட்கள் கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதைப்போல் பவானி பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஹான்ஸ், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு  வைத்திருந்ததாகச் சிலர்  கைது செய்யப்பட்டனர். அடுத்து அம்மாபேட்டை, பெருந்துறை, அந்தியூர், கடத்தூர்,வெள்ளித்திருப்பூர், கோபி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 30 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற அதிரடி சோதனை தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.