Skip to main content

மாணவர்களின் கருத்துரிமையை தமிழக அரசு நசுக்கி வருகிறது - வைகோ 

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

மாணவர்களின் கருத்துரிமையை தமிழக அரசு நசுக்கி வருகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 


தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குநர் 25.04.2018 தேதியிட்ட சுற்றறிக்கை ஒற்றை அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கு பெறுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும், பிற இயக்கங்களின் கருத்துகளைப் பரப்புவதையும் விவாதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தப்பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

 

vaiko


 

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் கருத்து உரிமைகளையே நசுக்கும் வகையில், கல்லூரி கல்வி இயக்குநர் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்து இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
 

வருங்கால தலைமுறையை வார்ப்பிக்கும் கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் நாட்டின் தற்கால நிலைமைகளை உணரவும், கருத்து விவாதங்களில் ஈடுபடவும், கல்லூரிகளில் நடைபெறும் விழாக்கள் பெரிதும் பயன் அளிக்கின்றன. கல்லூரி மாணவர்களிடையே நாட்டு நலனுக்காக உழைக்கும் நல்லோர், அறிஞர் பெருமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து உரையாடுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் ஆகும்.

 

கல்லூரி மாணவர்களின் இதயத்தில் இலட்சிய விதைகள் ஊன்றவும், அவை வளர்ந்து பயிராகி சமுதாயத்தின் உயர்ந்த நிலைக்கு இளைஞர்கள், பல்வேறு துறைகளில் சிகரம் தொட்ட சாதனையாளர்களாக சுடர் விடவும் கல்லூரி விழாக்களும், அவற்றில் ஆன்றோர் சான்றோர் ஆற்றும் அரிய உரைகளும் அமைவது தொன்றுதொட்டு நடப்பதாகும்.
 

 

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கலைஞர், ப.ஜீவானந்தம், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பல்கலைக் கழங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்களிடையே ஆற்றிய உரைகளால் இளைஞர் கூட்டம் எழுச்சி பெற்று, அவை வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு உள்ளது.
 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1945 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘நிலையும் நினைப்பும்’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரை இளைஞர்களுக்கு புதிய கருத்துக்களின் மூலம் புத்துலகம் படைக்க வழி காட்டியது.
 

1964 ஆம் ஆண்டு தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் அக்கல்லூரி முதல்வர் சந்திரன் தேவநேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தத்துவத்துறை பொன்விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘The Basic Philosophy of DMK’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையால் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்றனர் என்பது மறக்க முடியாதது. மறுநாள் பச்சையப்பன் கல்லூரியில் ‘Moods and Deeds’ எனற் தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவும் சரித்திரச் சிறப்பு வாய்ந்தது.
 

கல்லூரி மாணவர்களிடம் அரசியல் கருத்துக்கள் சென்றடைவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆங்கிலேயர் ஆட்சியில்கூட ஏற்பட்டது இல்லை. சர்வாதிகார பாசிச ஆட்சியின் அணுகுமுறையை நினைவூட்டக் கூடிய வகையில் அதிமுக அரசு கருத்துகளுக்கு கடிவாளம் போட நினைப்பது கதிரவனை கைகளால் மறைக்கும் மூடத்தனம் போன்றது.

 

தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழக மக்கள் பல்வேறு களங்களில் கிளர்ந்து எழுந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், மக்களாட்சி பூத்துக் குலுங்கும் நாட்டில் சிந்தனைகளுக்கு விலங்கு பூட்ட நினைத்தால், மாணவர்களின் கருத்துரிமைப் போராட்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என்று எச்சரிப்பதுடன், கல்லூரி கல்வி இயக்குநர் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்