ஈரோடு பெரியவலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(49). தொழிலாளி. இவர் நேற்று அவரது நண்பர் சுப்பிரமணி என்பவருடன் ஈரோடு சூளை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிக்க பணம் கேட்டு சிறிய கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். ஆனால், சுரேஷ்குமார் பணம் தர மறுத்து கூச்சல் போட்டதால், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து சுரேஷ்குமார் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது ஈரோடு நாராயணவலசு திருமால் நகரை சேர்ந்த முருகன் மகன் ரவி (23), ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சண்முகம் மகன் லோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.