Published on 01/05/2020 | Edited on 01/05/2020
![14 days 'isolation if refuse rule' - Chennai Municipal Commissioner](http://image.nakkheeran.in/cdn/farfuture/8jBgJMEr1DltXI186X4OmODDSrDV9XL9r_DenQZjQo4/1588331536/sites/default/files/inline-images/cor10222222_1.jpg)
நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோடு கட்டுக்குள் வராத நிலையை அடைந்துள்ளதாக தமிழக முதல்வர் கவலை தெரிவித்திருந்தார். இதனால் சென்னையில் பல்வேறு துரித நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சென்னை மாவட்ட எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் விதியை மீறி நடந்தால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது வரை சென்னையில் 906 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த நான்கு நாட்களில் கோயம்பேடு சந்தையில் மட்டும் 38 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.