Skip to main content

மாணவர்களுக்கு லட்சம் ரூபாயில் ஸ்மார்ட் ஃபோன், 4ஜி சிம், ரீசார்ஜ்... உதவி செய்த அரசுப் பள்ளி ஆசிரியை!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

 1 lakh rupees for students smart phone, 4G SIM, recharge ... Government school teacher who helped

 

எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியை பைரவி தம்முடைய சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் மற்றும் 4ஜி சிம்கார்டு உடன் ரீசார்ஜ் ஆகியவற்றை வழங்கி வீட்டிலிருந்து பள்ளி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (05.09.2020) ஆசிரியர் தினவிழா சமூக இடைவெளியுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளியின் உதவி தலைமை ஆசிரியையும் மூத்த பட்டதாரி ஆசிரியையுமாகிய க. பைரவி (கணிதம்) என்பவர் 10ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தம்முடைய சொந்தப் பணத்தில் சுமார் 1 லட்சம் செலவில் 4ஜி ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் 4ஜி சிம்கார்டு உடன் ரீசார்ஜ் ஆகியவற்றை வழங்கி 'வீட்டில் இருந்தே பள்ளி' என்ற அரசின் திட்டத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
 

முன்னதாக இந்த உதவியை அவர் செய்வதற்கான காரணமாக பின்வரும் தகவல்களை கூறினார்.

 

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்திடவேண்டி, தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவிற்கு இணங்கவும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அவர்களது மேலான ஆலோசனைகளின்படியும் மாணவர் சேர்க்கை பேரணியை நடத்தினர். அப்போது எளம்பலூர் மற்றும் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர், சமத்துவபுரம் மற்றும் ராஜிவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் பள்ளியின் சிறப்பம்சங்களையும் அரசின் பல்வேறு சலுகைகள் மற்றும் உதவி திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து வீடுதோறும் பரப்புரை நடத்தி வந்தனர்.


அப்போது தம்மிடம் பயிலும் மாணவர்கள் வீட்டிலிருந்தே பள்ளி திட்டத்தில் தொடர்ச்சியாக பங்கேற்காத காரணம் கேட்டறிந்த போது: "சிலரிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை. சில பெற்றோர் வேலை பார்க்கும் இடத்திற்கு ஃபோன் எடுத்துச் சென்று விடுகின்றனர். ரீ-சார்ஜ் செய்ய வசதியின்மை, வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால் ஃபோன் ஒதுக்கீடு நேரம் கிடைக்கவில்லை."

போன்ற பொதுவான பல காரணங்களாலும் எழ்மைநிலையில் இருப்பதாலும் பல மாணவர்கள் தொடர்ச்சியாக பாடத்தில் கவனம் செய்ய இயலவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் தன்னுடைய மாணவர்களுக்கு ஃபோன் மூலமான வகுப்பு மிகவும் அவசியம் என்று கருதிய கணித ஆசிரியை திருமதி. க.பைரவி, தம்முடைய சொந்தப் பணம் 1 -லட்சம் செலவில் புதிதாக 16 ஸ்மார்ட் ஃபோன்கள், 4ஜி சிம் கார்டுகள் புதிதாக ஆக்டிவேட் செய்து ரீச்சார்ஜ் உடன் பத்தாம் வகுப்பு ஆங்கில வழி பிரிவின் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார்.

அச்சமயம் மாணவர்களுக்கு அந்த தொலைபேசி எண்ணை கல்வி செயல்பாடுகளுக்கு மற்றும் பிரத்யேகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், எவ்வித இடற்பாடும் இல்லாமல் தொடர்ந்து கல்வி செயல்பாடுகளில் எவரும் விடுபடாமல் பங்கேற்க வேண்டும் எனவும், லாக்டவுன் முடியும் வரையில் தாமே ரீச்சார்ஜ் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

 

Ad


மேலும் தன்னுடைய வகுப்பில் (பத்தாம் வகுப்பு ஆங்கில வழி) புதிதாக சேரும் மாணவர்களுக்கும் இதேபோல வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேற்படி செலவு என்பது தமது ஒருமாத ஊதியத்தைவிடவும் மிகவும் அதிகம் என்ற போதிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காக தம்மால் இந்த உதவி செய்ய முடிந்ததை எண்ணி பெருமையடைவதாகவும் மேலும் பல NGO தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியால் இன்னும் பல மாணவர்களுக்கு உதவியைப் பெற்று வழங்கிட முயற்சிப்பதாகவும் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.

கணித பாடம் பயில்வதற்கு மாணவர்களிடம் சுணக்கம் இல்லாத தொடர் பங்கேற்பு அவசியம் என்பதால் இந்த உதவியை மனமுவந்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.