Skip to main content

“வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” - எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Vote for admk to get development plans Edappadi Palaniswami campaign

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து வரக்கூடிய நமக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி கிடைக்க, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி கிடைக்க, சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நிற்கிறோம். மத்தியில் திமுக அரசு 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் தற்போது ஏற்பட்ட சிறிய புயலுக்கே திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவில்லை. நிதியை முறையாக கேட்டு பெறுவது மாநில அரசின் கடமையாகும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அரசு முறையாக ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வெகு நாட்கள் இல்லை. அதிமுக விரைவில் ஆட்சியை அமைக்கும். திமுக அரசை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர் நகருக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தான் துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.  இதேபோன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் முசிறி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது .

எனவே உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி மற்றும் அதிமுக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.