
சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மத்திய தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர், தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார். மத்திய அரசு தரமான அரிசியை கொடுத்தாலும் தமிழக அரசு தரமற்ற அரிசியையே மக்களுக்கு வழங்குகிறது என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளின் கண்காணிப்பில் தரமான அரிசி மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சரின் கேள்விக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரிசி அரைக்கும் தனியார் ஆலைகளுக்கும் சென்று அரிசி தரமாக இருக்கிறதா என்று சோதனை செய்கிறார்கள். இந்திய உணவுக்கழகம், அரிசி எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு விகிதாச்சாரம் வைத்துள்ளது. அந்த தரத்தில் இருந்தால் தான் குடோன்களுக்கு அரிசி அனுப்பப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு கொடுக்கிறோம் என்று கூறுவது சரியா? எனக் கூறியுள்ளார்.