Skip to main content

“தி.மு.க.காரனை அடிச்சு, தூக்கி உள்ளப்போடாம என்ன செய்றீங்க?” போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு..! 

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

Tirupattur Mini Clinic opening admk and dmk members


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மிட்டாளம் ஊராட்சி, மதனாஞ்சேரி ஊராட்சி, பாலூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி, டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். 

 

இவர்கள்  வருகையையொட்டி அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வினர் மாறி மாறி ஃப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகளைக் கட்டினர். மேலும், விழா மேடையில் அமைச்சருக்கும் - தி.மு.க., எம்.எல்.ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துச் சென்றுவிட்டார்.

 

நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் திரும்பிச் செல்லும்போது, வாணியம்பாடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனி செல்வத்திடம், தி.மு.க.வின் கொடிகள் மற்றும் பேனர்களை வைக்க, எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? நீங்கள் எப்படி ‘லா அண்ட் ஆர்டர்’ பிரச்சனையை எதிர் கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பியவர், தி.மு.க.காரர்களை அடிச்சுத் தூக்கி உள்ளே போடுங்கள் என்று உத்தரவிட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

 

Tirupattur Mini Clinic opening admk and dmk members

 

இந்நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி, உரிய அனுமதியின்றி 3 ஊராட்சிகளில் பேனர்கள் வைத்ததாக கிராம நிர்வாக அலுவலர்கள் காவல் நிலையங்களில் கொடுத்த புகாரில் ஆம்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், தி.மு.க ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஞானவேலன் மற்றும் தி.மு.க மாதனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் உட்பட தி.மு.க.வினர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதேபோல், அ.தி.மு.க ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில், மாதனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி ராமலிங்கராஜா, மாதனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் போன்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பேனர் அச்சிட்டுக் கொடுத்ததாக அச்சக உரிமையாளர்கள் மீதும் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அது எந்த அச்சகம் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.