Skip to main content

வேங்கைவயல்; “தனி நீர்த்தேக்கத் தொட்டி வேண்டாம்” - தொல். திருமாவளவன்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Thirumavalavan protest regarding Vengaivayal village issue

 

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக அச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டி வள்ளுவர்கோட்டத்தில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக முதல்வர் நேரடியாக கவனம் செலுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

முக்கியமாக இதில் சில கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். வேங்கைவயல் கிராமத்தில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட வேண்டும். அதை சுத்தம் செய்து மறுபடியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது. புதிதாக அங்கே அவர்களுக்கு என்று தனியாக குடிநீர் தொட்டியையும் அமைக்கக்கூடாது. ஏற்கனவே பொதுவான குடிநீர்த் தொட்டியில் இருந்து அவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. அதையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் முதன்மையான கோரிக்கை.

 

இரட்டைக் குவளை முறை அந்த கிராமத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதை அண்மையில் வெளியான புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவிலேயே அதிகம் தீண்டாமை கொடுமைகள் நடந்தேறக்கூடிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் 10 மாநிலங்களுக்குள் இடம் பெற்று இருக்கிறது. இந்த அளவிற்கு தமிழ்நாட்டில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. வேதனை அளிக்கிறது.

 

இது உண்மையான கண்டனத்திற்கு உரியது. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரட்டைக் குவளை முறையை முற்றாக ஒழிப்பதற்கு சிறப்பு படை பிரிவை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த கிராமங்களில் இன்னும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். தனியார் நிறுவனங்கள் சர்வே செய்து புள்ளி விவரங்களை வெளியிடுகின்றன. தமிழக அரசே நேரடியாக களத்தில் இறங்கி எங்கெல்லாம் இரட்டைக் குவளை முறை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆணை பிறப்பித்து எச்சரிக்கை விடுவித்து அவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.