Skip to main content

எடப்பாடி அன் கோ-வின் 'முகாரி' ராகத்தைக் கேட்டிருந்தால் எஸ்.ஐ. ரகுகணேஷுக்கு புரமோஷன் கூட கொடுத்திருப்பார்கள்: எஸ்.எஸ்.சிவசங்கர்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

police

 

எடப்பாடி அன் கோ தினம் பாடும், "அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்", என்ற முகாரி ராகத்தைக் கேட்டு, திமுக தலைவர் யோசித்திருந்தால் இந்த வழக்கை இந்தக் கூட்டம் வலுவிழக்க செய்திருக்கும். நீதிபதி குற்றம் சாட்டிய பிறகு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோருக்கு அடுத்த நாளே பணியிடம் வழங்குகிறார்கள் என்றால், திமுக தலைவர் தலையிட்டிருக்காவிட்டால் எஸ்.அய்கள் பாலகிருஷ்ணனுக்கும், ரகுகணேஷுக்கும் இன்ஸ்பெக்டர்களாக கூட புரமோஷன் கொடுத்திருப்பார்கள் என கூறியிருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

 

மேலும் அவர், "அரசியல் செய்கிறார், அரசியல் செய்கிறார்", என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஓலத்தைக் கண்டு அயர்ந்து போகாமல், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் தான், இன்று சாத்தான்குளம் காவல் நிலைய கொலைக்கார எஸ்.ஐ ரகுகணேஷின் கைது நடந்திருக்கிறது.

 

மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்த பிறகு தான், ஜெயராஜ் - பெணிக்ஸ் கொலை குறித்து பரவலான கவனம் ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனக் களம் இறங்கினார்கள். இந்திய அளவில் ஊடகங்கள் பார்வை திரும்பியது. உலக செய்தியானது. நீதித்துறை தானாக தலையிட்டது. இன்று கைது வரை வந்திருக்கிறது.

 

22 ஆம் தேதி ஜெயராஜ் - பெணிக்ஸ் இருவரும் போலீஸாரின் கொலை வெறி தாக்குதலுக்கு உயிரிழந்தனர்.

 

23 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தார்கள். அப்போதே "திரைமறைவில் போலீஸ் ஆட்சியா?", என்ற கேள்வியை எழுப்பினார்.

 

24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், " காவல்துறை அதிகாரிகளே, அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்து நீங்களே குற்றவாளிகளாகும் செயல்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கடமையினை சரியாகச் செய்யுங்கள். கால சக்கரம் இப்படியே சுற்றிக் கொண்டிருக்காது", என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

26 ஆம் தேதி அன்று, கொலையுண்ட அப்பாவிகள் ஜெயராஜ் - பெணிக்ஸ் குடும்பத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக மகளிரணி செயலாளர் எம்.பி கனிமொழி மூலமாக ரூபாய் 25 லட்சம் வழங்கப்பட்டது.

 

அன்றே, இந்தக் கொலை வழக்கில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு காணொலியை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

 

sss

 

27 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம், வழக்கு தொடுப்போம் என மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

 

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்று, ஜெயராஜ் - பெணிக்ஸ் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறி, வழக்கில் நியாயம் கிடைக்க உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்து வந்தார்.

 

29 ஆம் தேதி, கொலையாளிகளை IPC 302இன் கீழ் வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.

 

அன்றே, நீதிபதியை ஒரு காவலர் மிரட்டிய செய்தி வெளியான உடன், அது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டனம் தெரிவித்தார்.

 

30 ஆம் தேதி, தொடர்ந்து இத்தனை அறிக்கைகள் வெளியிட்டு, வலியுறுத்திய பிறகும் எடப்பாடி இது குறித்து வாய் திறக்காமல், தக்க நடவடிக்கை எடுக்காமல், கொலையாளிகளைக் காக்கின்ற முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால், இந்தக் கொலைக்கு பொறுப்பேற்று போலீஸ் மந்திரி என்ற முறையில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

 

இவ்வளவு கடுமையாக தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் மு.க.ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்.

 

"மூச்சுத் திறணலால் மரணம், உடல் நலக் குறைவால் மரணம்", என தானே டாக்டராக மாறி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்தார். அப்படியே பிரச்சினையை அமுக்கி விடலாம் என்று பார்த்தார்.

 

அந்தத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி கடம்பூர் ராஜூ "லாக்கப் மரணத்திற்கு" புதிய விளக்கம் கொடுத்தார். "காவல் நிலையத்திலேயே அடிபட்டு இறந்து போனால் தான் லாக்கப் மரணம். அவர்கள் சிறைக்கு போய், மருத்துவமனையில் இறந்தார்கள். அதனால் அது லாக்கப் டெத் அல்ல", என்று கோமாளித்தனமாக பேசினார்.

 

உதயக்குமார் போன்ற மேதாவி அ.தி.மு.க அமைச்சர்கள், தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் பெரிய விஷயமே இல்லை என்ற தோரணையில் பேட்டிக் கொடுத்தார்கள்.

 

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொடுத்த அறிக்கைகளைக் கண்டும், காணாதது போல் முதலமைச்சர் எடப்பாடி நாட்களைத் தள்ளினார்.

 

எதிர்க்கட்சி, பத்திரிகைகள், ஊடகங்கள் எனத் தொடர்ந்து ஒலித்த குரல்களைக் கேட்டு, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்தது. அதனால் தான் வழக்கு இந்த நிலைக்கு வந்துள்ளது.

 

http://onelink.to/nknapp

 

எடப்பாடி அன் கோ தினம் பாடும், "அரசியல் செய்கிறார் எதிர்கட்சித் தலைவர்", என்ற முகாரி ராகத்தைக் கேட்டு, மு.க.ஸ்டாலின் யோசித்திருந்தால் இந்த வழக்கை இந்தக் கூட்டம் வலுவிழக்க செய்திருக்கும்.

 

எல்லோரும் பார்த்திருக்கவே, நீதிபதியை ஒரு காவலரை விட்டு மிரட்டுகிறார்கள், தடயங்களை அழிக்க முயல்கிறார்கள், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்றால், மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தியிருக்காவிட்டால் வழக்கை ஊற்றி மூடியிருப்பார்கள்.

 

நீதிபதி குற்றம் சாட்டிய பிறகு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோருக்கு அடுத்த நாளே பணியிடம் வழங்குகிறார்கள் என்றால், தளபதி அவர்கள் தலையிட்டிருக்காவிட்டால் எஸ்.ஐ-கள் பாலகிருஷ்ணனுக்கும், ரகுகணேஷுக்கும் இன்ஸ்பெக்டர்களாக கூட புரமோஷன் கொடுத்திருப்பார்கள்.

 

மு.க.ஸ்டாலின் கையிலெடுத்த அரசியல் நடவடிக்கைகள் தான், இன்று இந்தக் கொலை கும்பலைக் கைது வரை கொண்டு வந்திருக்கிறது.

 

மு.க.ஸ்டாலின் அரசியல் தொடரும், கொலை ஆட்சியை வீழ்த்த!'' எனக் கூறியிருக்கிறார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்