Skip to main content

உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்; உயிரைப் பணயம் வைக்கும் பஞ்சாப் முதல்வர்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Punjab Chief Minister who rejected the Z+ security offered by the central government

 

மத்திய அரசால் வழங்கப்படும் Z+ பாதுகாப்பை பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் நிராகரித்துள்ளார். 

 

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கான தனி தேசம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மாதம் அக்குழுவின் தலைவர் அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மாநில எல்லையில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் தொடர் நடவடிக்கைகளை மத்திய உளவுத்துறையினர் கண்காணித்தனர். அதே வேளையில் அம்ரித்பால் சிங்கின் கைதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் பக்வந்த் மானின் மகள் சீரத் கவுர் மான் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டுள்ளார் என பட்டியாலவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

 

இதனிடையே முதலமைச்சர் பக்வந்த் மானுக்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து 49 வயதான பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுக்கு கடந்த வாரத்தில் இருந்து Z+ அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என மத்திய அரசுக்கு பக்வந்த் மான் கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தான் எழுதிய கடிதத்தில், டெல்லியிலும் பஞ்சாபிலும் தமக்கு பஞ்சாப் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். 

 

டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசரம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அவசர சட்டம் நிரந்த சட்டம் ஆவதற்கு எதிராக மாநில அரசுகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் மத்திய அரசின் பாதுகாப்பை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஆம் ஆத்மி தனித்துப் போட்டி’ - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
'Aam Aadmi alone contest' - Punjab Chief Minister's announcement!

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

vck ad

இந்த சூழலில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி’ என அவர் கூறியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

'Aam Aadmi alone contest' - Punjab Chief Minister's announcement!

இந்நிலையில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்; பஞ்சாப்பில் புதிய முயற்சி

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

Change in working hours of government offices; A new venture in Punjab

 

பஞ்சாப் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

அரசு அலுவலகங்களின் நேரம் அனைத்து மாநிலங்களிலும் ஏறத்தாழ காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை இருக்கும் சூழலில் பஞ்சாப் அரசு அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை காலை 7.30 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை செயல்படும் நேரமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

 

இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்மான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, பஞ்சாப் மாநிலத்தில் பிற்பகல் 1.30 மணியில் இருந்து மின் நுகர்வு அதிகரிக்கிறது. அதாவது பீக் லோட் பிற்பகல் 1.30 மணிக்கு மேல் துவங்கும். எனவே அரசு அலுவலகங்கள் பிற்பகல் 2 மணியளவில் மூடப்பட்டால் மின்சாரம் பயன்பாடு 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க முடியும்.

 

இந்த முடிவு மக்களுக்கு பயன் அளிக்கும். மேலும் அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்திற்கு பின் பிற நிகழ்ச்சிகளிலும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியும் என்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு வரும் மே 2 ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் எனவும் ஜூன் 15 வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.