Skip to main content

அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா! - காங்கிரஸிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

puducherry congress M.L.A. dismissed

 

புதுச்சேரி மாநில அரசின் பொதுப்பணித் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவருமான நமச்சிவாயத்திற்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. இதனால், கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் அமைச்சர் நமச்சிவாயம் அதிருப்தியில் இருந்துவந்தார். அதேபோல் மற்றொரு எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தானும் அதிருப்தியில் இருந்துவந்தார். 

 

இந்நிலையில், அதிருப்தியின் காரணமாக 25ஆம் தேதி தனது பதவிகளை ராஜினாமா செய்வதற்காக கரசூரிலிருந்து இருவரும் புறப்பட்டனர். புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்குச் சென்றபோது, அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், "நமச்சிவாயம் கட்சித் தலைவராக இருந்தபோது முழு உரிமை கொடுக்கப்பட்டது. அமைச்சராகவும் சுதந்திரமாக செயல்பட்டார். ஆனால், கட்சிக்கு மிகப் பெரிய துரோகம் செய்துவிட்டார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவருடன் செல்பவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்"  எனக் கூறியுள்ளார்.

 

இதனிடையே கடந்த 23-ஆம் தேதி கரோனா சமயத்தில் புதுச்சேரி வில்லியனூரில்  ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தியதற்காக வில்லியனூர் காவல் நிலையத்தில் 188, 259, 51 ஆகிய பிரிவுகளில் நமச்சிவாயம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்