Skip to main content

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு! - ஜி.கே.மணி அறிவிப்பு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என்று அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கூட்டணி இறுதி வடிவம் பெறவில்லை. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார். இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தல் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் 22-ஆம் தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. 

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் நிலையிலான களப்பணிகள்  உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (22.02.2021) காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன.

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கட்சியின் மாநிலப் துணைப் பொதுச் செயலாளர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக இந்தக் கூட்டம் நடத்தப்படும். 2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்காக இதுவரை செய்துள்ள ஏற்பாடுகள், பணிகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன. வாக்குச்சாவடிகள் நிலையில் களப்பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

 

கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணிகளை மேற்கொள்ளவுள்ள, ஒருங்கிணைக்கவுள்ள நிர்வாகிகள், களப்பணியாளர்கள் ஆகியோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்