
பல்லடம் மூவர் கொலை வழக்கில் கொலையாளியை சிபிசிஐடி போலீசார் நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் பண்ணை வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் கடந்த வருடம் 29/11/2024 அன்று அதிகாலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
வீட்டுக்கு வந்த சவரத் தொழிலாளி மூன்று பேரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவிநாசிபாளையம் போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு சிறிதும் முன்னேற்றம் இல்லாமல் விசாரணையில் இருந்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க முதலில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தனிப்படை எண்ணிக்கைகள் 18 ஆக உயர்த்தப்பட்டும் விசாரணையில் சிறிதளவும் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. 100 நாட்களை எட்டியும் முடிவு கிடைக்காததால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள ராமச்சந்திரன் என்ற நபரை சிபிசிஐடி போலீசார் கொலை நிகழ்ந்த இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் கொலை நிகழ்ந்த பகுதியில் பயன்பாட்டில் இருந்த 30 ஆயிரம் செல்போன் எண்களின் அழைப்புகளை சோதனை செய்து ராமச்சந்திரனின் என்பவர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஒரு வழியாக இந்த கொலைச் சம்பவத்தில் இறுதிக்கட்டத்தை சிபிசிஐடி போலீசார் தொட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே ராமச்சந்திரன் என்பவர்தான் இந்த கொள்கையை நிகழ்த்தினாரா கொலைக்கான காரணம் என்ன என்பது போன்ற முழுமையான தகவல்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.