Skip to main content

ஆளும் கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள்: தலைமைக்கு விசுவாசமாக இருங்கள்: மு.க.ஸ்டாலின்

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

 

தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாநாடு வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. 
 

இதில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,
 

உள்ளாட்சி அமைப்பு என்றால் எனக்கு எப்போதுமே அதிக மகிழ்ச்சி தான். ஏனென்றால் நானும் உள்ளாட்சி அமைப்பில் இருந்து வந்தவன் தான். சென்னை மாநகராட்சி தேர்தலில் இரண்டு முறை மக்களால் நேரடியாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க பல இடங்களில் பாலங்கள் கட்டினேன். காலை முதல் இரவு வரை நடந்தே சென்று மக்களை நேரடியாக சந்தித்து சிறப்பாக பணியாற்றினேன்.

 

dmk



இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் பணியானது நமக்கு வாக்களித்த மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தாத வகையிலும், வாக்களிக்காத மக்களுக்கு நாம் இவருக்கு வாக்களிக்காமல் தவறு செய்து விட்டோமே என்று வருத்தப்படும் அளவில் உங்களது பணி இருக்கவேண்டும். மக்கள் சொல்வதை செய்கிறோமோ இல்லையோ? அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். மக்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பகுதியை தி.மு.க. கோட்டையாக மாற்றிக்காட்ட முடியும்.
 

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக கையேடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த கையேட்டில் உள்ள விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கிராம சபை கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களையும் பேச வையுங்கள். உள்ளூர் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்க தீர்மானம் நிறைவேற்றுங்கள். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்.


 

பஞ்சாயத்து தலைவர்களுக்கு ‘செக்’கில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது என்று துரைமுருகன் குறிப்பிட்டார். இது தொடர்பாக நாங்கள் புகார் செய்து இருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் எடுத்து சொல்வோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்கும் செல்வோம். எந்த பிரச்சினை என்றாலும் நேரடியாக சென்று ஆய்வு செய்யுங்கள்.
 

பெண்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், வாய்க்கால், கண்மாய் பராமரிப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பொது கழிப்பறை, தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு முக்கிய சாலை சந்திப்புகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.


 

டெண்டர் விடுவதில் தான் கெட்ட பெயர் ஏற்படும். எனவே அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். சட்ட விரோத செயல்களுக்கும், ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுத்து விடாதீர்கள். வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அடுத்து நான் (ஸ்டாலின்) தான் முதல் -அமைச்சர் என்றெல்லாம் இங்கே பேசினார்கள். நீங்கள் சிறப்பாக மக்கள் பணியாற்றினால் தான் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் அமர முடியும். எனவே அமைதியாக நடந்து தி.மு.க.வுக்கு ஒரு நற்பெயரை ஈட்டித்தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
 

ஆளும் கட்சியினர் உங்களை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள். உனக்கு பாதி எனக்கு பாதி என கூறி உங்களை மாட்டி விட பார்ப்பார்கள். எனவே ஆளும் கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள். கட்சி தலைமைக்கும், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.