Skip to main content

ரமணா பட பாணியில் ஊழல் செய்த பா.ஜ.க; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Minister Udayanidhi Stalin says Ramana movie style scandal BJP did it

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் உள்ளது. இந்த பகுதியில் வெங்கடேஸ்வரா கல்வியியல் வளாகத்தில் கலைஞர் திடல் அமைக்கப்படவுள்ளது. இந்த திடலில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இந்த கூட்டத்திற்கு, அமைச்சர் சி.வி. கணேசன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

 

இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறது. அந்த கட்சி அதற்காக போராட வேண்டும். இந்த நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.  நீட் தேர்வு ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறேன். இந்த போராட்டத்திற்கு ஒரு உதயநிதி ஸ்டாலின் மட்டும் போதாது, ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக  திமுக இளைஞரணி சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த வாரத்தில் போராட்டம் நடத்தினோம்.

 

அந்த போராட்டத்தின் தலைமையாக சென்னையில் அறப்போராட்டம் நடந்தபோது, ஒரு அமைச்சராக இருக்கும் போது போராட்டம் நடத்தினால் அமைச்சர் பதவியில் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கூறினர். அதேபோல், அதிமுக வழக்கறிஞர் ஒருவர், என்னை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். ஆனால், எனக்கு இந்த அமைச்சர் பதவி எல்லாம் முக்கியம் கிடையாது. தமிழக மாணவர்களின் உயிர் தான் முக்கியம்.

 

இந்த பதவி, பொறுப்பு, அமைச்சர் பதவிக்காக திமுக தொடங்கப்படவில்லை. மாநில கல்விக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் தொடங்கப்பட்டது தான் திமுக என்பதை அனைவரும் உணர வேண்டும். நீட் தேர்வு விலக்குப் பெறுவது தொடர்பாக திமுக உறுதி அளித்தது உண்மைதான். அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த உறுதிமொழிக்கேற்ப உண்மையாக போராடி வருகிறேன்.  

 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 ஆண்டுகளாகியும் இதுவரை மக்களுக்கு எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி இந்தியாவில் இருந்த நாள்களை விட வெளிநாட்டில் இருந்த நாள்கள் தான் அதிகம். ஒன்றிய பா.ஜ.க அரசு ரூ.7 1/2 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது. ரமணா பட பாணியில் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தை இறந்து போன 88 ஆயிரம் கோடி பேருக்கு கொடுத்து ஊழல் செய்துள்ளார்கள்.  நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈ.டி.க்கும் பயப்பட மாட்டோம். ஏனென்றால் தமிழகத்தை மு.க. ஸ்டாலின் ஆண்டு கொண்டு இருக்கிறார். 

 

மோடியால் வளர்ந்தது ஒரே குடும்பம் அதானி குடும்பம் தான். அவர்கள் ரயில்வே, விமான சேவை, ஸ்டேடியம் என அனைத்தையும் அதானியிடம் ஒப்படைத்து விட்டார்கள். தமிழ்நாடு எனும் வீட்டில் விஷப் பாம்பு எனும் பா.ஜ.க நுழைய பார்க்கிறது. வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எனும் அடிமைகளை விரட்டி பா.ஜ.க.வை வீட்டிற்கு அனுப்பி நாட்டை சுத்தப்படுத்த வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.