
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த ஒரு வருடமாகவே அமைச்சர் விஜயபாஸ்கரின் 'சி.வி.பி. பேரவை' என்ற பெயரில் 6 முறை பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் புகார் மனு ஒன்றை தேர்தல் அலுவலரிடம் அளித்துள்ளனர். அதில், "தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையும் மீறி தொடர்ந்து வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, தட்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள், கட்சி நிர்வாகிகள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. இப்பொருட்கள் அவருக்குச் சொந்தமான இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள கல்லூரியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையிலான தி.மு.க.வினர் விராலிமலை தொகுதியின் தேர்தல் அலுவலரான இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியரிடம் அளித்துள்ளனர். மேலும் அவர்கள், 'நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்படும்' என்றும் கூறியுள்ளனர்.