Skip to main content

மக்கள் நீதி மய்யத்தில் கமலின் அதிரடி அறிவிப்பு! தொண்டர்கள் மகிழ்ச்சி! 

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் புது வாக்காளர்களை பெருமளவு கவர்ந்தது. நகர்ப்புற பகுதியில் மக்கள் நீதி மய்யத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதோடு மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று மூன்றம் இடம் பிடித்தது. அதே போல் கிராமசபை கூட்டம் நடத்தி கிராமப்புற பகுதிகளிலும் கட்சியை கொண்டு சேர்த்தனர். இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற சில வியூகங்களை வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.   
 

mnm



இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்து நின்ற ஒரு சூழலில், அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டது தான் மக்கள் நீதி மய்யம் கட்சி அதன் காரணமாகவே நமது கட்சி, ஆரம்பித்த 14 மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை துணிவுடன் சந்தித்தது. அனைத்துத் தரப்பினரும் ஒத்துக்கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்தனர்.அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி, வரும் 2021ல் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபடுவதென்று முடிவு செய்து, நமது கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்பினேன். 
 

mnm



தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்தேன். அந்த வகையில் நமது கட்சி, தலைவரின் கீழ் துணைத்தலைவர், ஆறு பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடையப் பொதுச்செயலாளர் அமைப்பு - வடக்கு மற்றும் கிழக்கு & தெற்கு மற்றும் மேற்கு என்று இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடி வரை சென்றடையப் பொதுச்செயலாளர் - ஒருங்கிணைப்பு என்கின்ற பதவி உருவாக்கப்படுகிறது. இத்துடன் பொதுச்செயலாளர் - கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர் - சார்பு அணிகள், பொதுச்செயலாளர் - தலைவர் அலுவலகம் என்றும் ஏற்படுத்தப்படுகிறது. 


மேலும் தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகத்தினை எளிமைப்படுத்திடும் வகையில், சென்னை , காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி என்று 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு பதவிக்கு அருணாச்சலம், பொதுச்செயலாளர் அமைப்பு பதவிக்கு மெளரியா, மற்றொரு பொதுச்செயலாளர் அமைப்பு பதவியை தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வை கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுச்செயலாளர் கொள்கை பரப்பு பதவிக்கு ரங்கராஜன், பொதுச்செயலாளர் சார்பு அணிகள் பதவிக்கு உமா தேவி மற்றும் பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் பதவிக்கு பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை இப்போது இருந்தே கமல் தீவிரமாக இறங்கிவிட்டதாக சொல்கின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.