!["Even if it is 10 months or 10 years, the government should do it" - Edappadi Palanisamy interview!](http://image.nakkheeran.in/cdn/farfuture/byrEqlOJYZRlMErGWG2aLxdzdndIQfAM8OzFuqRcsas/1637053869/sites/default/files/inline-images/z8586.jpg)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, கடலூர் ஆகிய இடங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில், குமரி மாவட்டத்திற்கு நேரில் சென்று மழை சேதங்களை ஆய்வு செய்தார். அதேபோல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் சேதங்களை ஆய்வுசெய்து நிவாரணங்களை வழங்கினர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததால்தான் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கினோம். அவ்வப்போது தேங்கும் மழைநீர் விவசாய நிலத்தில் தேங்கும்போது உடனடியாக நிவாரணம் கொடுத்த அரசு ஜெயலலிதா அரசு. 10 மாதமாக இருந்தாலும், 10 வருடமாக இருந்தாலும் அரசுதான் அதனைச் செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளான மக்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை'' என்றார்.