Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அண்ணாமலையைச் சந்திக்க இருக்கும் இபிஎஸ்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

Erode East by-election; EPS to meet Annamalai

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக  அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. 

 

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதியில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கத்தை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

மேலும், அதிமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான பாஜக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளோம். மேலும், இதுகுறித்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளான அதிமுக மற்றும் தமாகா கட்சியின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும்  ஜி.கே.வாசன் ஆகியோரிடமும் தொலைபேசி மூலம் பேசியுள்ளேன். அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகளை கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் டெல்லியில் உள்ள தேசியத் தலைமைக்கும் தெரிவித்துள்ளேன்.

 

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த எங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூன்று நாட்களில் வெளியாகும். இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதாகக் கேட்கிறார்கள்? ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிடுமா என்று முதலில் பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் பாஜக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி வரும். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி, கட்சித் தலைமையிடம் அவர்கள் கூறும் கருத்தைத் தெரிவிப்பேன். கூட்டணி தர்மம் நியாயம் என்று இருக்கிறது. எனவே, குறுகிய கால செயல்பாட்டுக்காக அதனை மீறக்கூடாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் யார் போட்டியிட்டார்கள் என்று பார்க்க வேண்டும். கூட்டணியில் இருக்கும்போது சிலவற்றை அனுசரித்துப் போக வேண்டும்" என்று பேசினார்.   

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாளை பாஜகவிடம் ஆதரவு கோர அதிமுக முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோர இருக்கின்றனர். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சந்திக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்