Skip to main content

ஊழலில் அண்ணா பல்கலைக்கழகம்...  எடப்பாடிக்கு சென்ற லிஸ்ட்...  அமைதியான அதிமுக அமைச்சர்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

ஊழல்களில் சிக்கித் திணறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 135 பேரின் பதவியைப் பறிக்கவேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கை உயர்கல்வித்துறைக்கு தலைவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பேராசிரியர் நியமன ஊழல்களுக்குக் காரணமான முன்னாள் துணைவேந்தர்களைக் கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், துணைவேந்தராக மன்னர் ஜவஹர் இருந்த காலத்தில் நடந்துள்ள பல முறைகேடுகளும் தற்போது விஸ்வரூபம் எடுக்கின்றன.

 

admk



இதுகுறித்து நம்மிடம் பேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், "அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என கலைஞர் ஆட்சியின் போது (2007) ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. இதற்காக 5 துணைவேந்தர்களும் நியமிக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தில் எழுந்த ஊழல் புகார்களால், பிரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் (2012) போது மீண்டும் ஒன்றிணைத்தனர்.

இப்படி இணைக்கும்போது பேராசிரியர்கள், ஊழியர்கள் என பலரும் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனங்களில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாக பலதரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி அனந்தகுமார் தலைமையில் 2017-ல் ஒரு கமிட்டியை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக விசாரணையைத் துவக்கிய கமிட்டி, 2012-ல் நடந்த நியமனங்களில் விதிமீறல்கள் உட்பட பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தது. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்களில் 135 பேர் ’தகுதியற்றவர்கள்’எனப் பதிவு செய்திருக்கிறது கமிட்டி. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளிலும் அந்த 135 பேரும் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை பதவியிலிருந்து நீக்கவும் வலியுறுத்தியிருந்தார் அனந்தகுமார்.

 

admk



அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றிணைந்தபோது சென்னையில் மன்னர்ஜவஹர், கோவையில் ராதாகிருஷ்ணன், திருச்சியில் ராமச்சந்திரன், நெல்லையில் காளியப்பன், மதுரையில் தேவதாஸ் ஆகியோர் துணைவேந்தர்களாக இருந்தனர். இவர்கள்தான் தகுதியற்ற 135 பேரையும் நியமித்தனர். பேராசிரியர் நியமனங்கள் கோடிகளிலும், ஊழியர் நியமனங்கள் லட்சங்களிலும் நடந்தன.

இதுபற்றிய கமிட்டியின் அறிக்கையை கடந்த 2018-ல் எடப்பாடி அரசிடம் ஒப்படைத்தார் அனந்தகுமார். ஆனால், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 வருடங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேசமயம், தற்போதைய துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், அனந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். இதனையறிந்து கொந்தளித்த கல்வியாளர்கள் பலரும், "ஊழல் பேராசிரியர்களைப் பதவியிலிருந்து நீக்கு; அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்து' என்கிற கோஷத்தை முன்னிறுத்தி தமிழக கவர்னர் புரோகித்துக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர். ஊழல் பேராசிரியர்களுக்கு கல்தா கொடுப்பதுடன் அவர்கள் மீதும் அவர்களை நியமனம் செய்த துணைவேந்தர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் துணைவேந்தர்கள் ஊழல் செய்யாமல் இருப்பார்கள்''‘என்கின்றனர்.


இந்த ஊழல் விவகாரங்கள் பெரிதாக வெடித்துள்ள நிலையில், 2008-ல் நடந்த மற்றொரு நியமன ஊழலும் பூதாகரமாகி வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய உயர்கல்வித்துறை அதிகாரிகள், "மன்னர் ஜவஹர் துணைவேந்தராக இருந்தபோது, தற்காலிக விரிவுரையாளர்களாக இருந்த 98 பேரை கடந்த 2008-ல் நிரந்தரப் பணியாளர்களாக நியமித்தார் மன்னர் ஜவஹர். இந்த நியமனங்களுக்கு வெளிப்படையான அறிவிப்போ, விளம்பரங்களோ மன்னர் ஜவஹர் செய்யவில்லை. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் விதிகளும், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளும் இதில் மீறப்பட்டுள்ளன. சுழற்சி முறை இடஒதுக்கீடும் பின்பற்றவில்லை. நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பும் நடக்கவில்லை.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த மிக மிக தகுதி குறைவானவர்களும் விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளில் சுமார் 25 கோடி ரூபாய் லஞ்ச பணமாக விளையாடியது. எம்.ஐ.டி. கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த பிரகாஷ், மணிகண்டன் ஆகிய இருவரையும் தனது பிரதான புரோக்கர்களாக வைத்திருந்தார் மன்னர் ஜவஹர். இதில் மணிகண்டன், மன்னர் ஜவஹரின் நேரடி உதவியாளர். அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து தற்போது இந்த நியமன ஊழல்களும் கிளம்பியுள்ளன. இதற்கான ஆதாரங்களை ராஜ்பவனுக்கும் அரசுக்கும் அனுப்பியபடி இருக்கிறார்கள் பேராசிரியர்கள். ஆனால், நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அமைச்சர் அன்பழகனும், நடவடிக்கை எடுக்க வேண்டிய துணைவேந்தர் சூரப்பாவும் மௌனமாகவே இருக்கிறார்கள். இந்த விவகாரம் விரைவில் நீதிமன்றங்களில் வெடிக்கவிருக்கிறது''‘என்கின்றனர்.

இதுகுறித்து மன்னர் ஜவஹரிடம் கேட்ட போது, "என் பணிக்காலத்தில் எந்த நியமனங்களிலும் விதிமீறல் கிடையாது. ரிசர்வேஷன், ரோஸ்டர் உள்ளிட்ட அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டே நியமனங்கள் நடந்தன. அதற்கு சிண்டிகேட்டும் ஒப்புதல் தந்திருக்கிறது'' என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.