Skip to main content

''இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுக தான்''-திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

 

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் திமுகவின் முப்பெரும் விழா இன்று தொடங்கியது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க,ஸ்டாலின் மேடையில் பேசுகையில், ''திராவிட மாடல் என்று சொன்ன பிறகு 'திராவிடம்' என்ற சொல் இந்தியா முழுமைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. திராவிடம் என்பது ஒரு காலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கொள்கையின் பெயராக இருக்கிறது. திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள். இன்னாருக்கு கல்வியை கொடு, இன்னாருக்கு கொடுக்காதே. இன்னாரை கோயில்களில் விடு, இன்னாரை விடாதே என்பது ஆரியமாடல். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிப்பதுதான் ஆரியமாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல். எல்லோருக்கும் கல்வியை கொடு, எல்லாருக்கும் வேலையை கொடு, எல்லாருக்கும் அதிகாரத்தை கொடு, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பது தான் திராவிட மாடல்.

 

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்துக்களின் சேர்க்கையாக திராவிட மாடல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துத்துறை வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை இந்த ஆட்சியினுடைய விரிந்த எல்லையாக அறிவித்திருக்கிறேன். இதை மையப்படுத்தி பல கூட்டங்களில், விழாக்களில் ஆற்றிய உரையில் முக்கியமான முழக்கங்களை மட்டும் சிறு தொகுப்பாக தயாரித்தது நூலாக வெளியிட்டு இருக்கிறோம். நாம் ஒரு கட்சிக்காரர்கள் அல்ல கொள்கைக்காரர்கள் என்பதை நமக்கு நாமே உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அதனையே ஊருக்கும் நாட்டுக்கும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். என்னை நம்பி இந்த இயக்கத்தையும், தமிழ் சமுதாயத்தையும் ஒப்படைத்து சென்றிருக்கிறார் கலைஞர். அந்த நம்பிக்கையை காப்பது ஒன்றே எனது ஒரே பணி. அந்த பணியை உலகமே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக நான் செய்து வருகிறேன்.

 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரைக்கும் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்திய அளவில் தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அதிகம். பட்டினி சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளது. இப்படி தமிழ்நாட்டினுடைய சாதனைகளை சொல்லிக்கொண்டே போக முடியும். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி.

 

எனக்கு இருக்கும் ஆசையெல்லாம் தமிழன் அனைத்திலும் முன்னேற வேண்டும் என்பதுதான் என்றார் தந்தை பெரியார். அத்தகைய கனவை செயல்படுத்தக்கூடிய செயலை அண்ணாவும், கலைஞரும் ஆட்சியில் அமர்ந்து நிறைவேற்றி காட்டினார்கள். அந்த செயற்கரிய செயலை செய்யக்கூடிய கடமை என்னுடைய தோளிலே சுமத்தப்பட்டிருக்கிறது. திமுகவின் தொண்டர்களான உங்களின் ஒத்துழைப்போடு நான் செயல்பட்டு வருகிறேன். தொண்டர்களால் ஆனவன் நான். இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. தொண்டர்களின் தலைமை தொண்டனாக நான் ஆட்சியில் அமர்ந்துள்ளேன். உடன்பிறப்புகளால் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறேன். கட்சி, ஆட்சி ஆகிய இரண்டையும் ஒரு சேர வழி நடத்தி வருகிறேன். கட்சியில்லாமல் நாம் ஆட்சிக்கு வந்துவிடவில்லை. இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுக தான் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன் என்று சொன்னால் சிலதை மனதில் வைத்து, அல்லது என்னை மட்டும் நம்பி நான் அதைச் சொல்லவில்லை. ஏதோ அகங்காரம் தொனிக்கும் வகையிலே அதை நான் சொல்லவில்லை. கலைஞரின் லட்சோப லட்ச உடன்பிறப்புகள் மீது நம்பிக்கை வைத்துத் தான் அதை நான் சொல்கிறேன்.

 

கோட்டையில் நம்மை அமர வைக்க தொண்டர்களால் முடியும். தொண்டர்களால் மட்டுமே முடியும். இதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். ஆட்சியில் இருந்தால் தான் இந்த நாட்டை நாம் வாழ்விக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்த பொழுது மகிழ்ச்சி அடைய வேண்டிய அண்ணா 1967 நாம் ஆட்சிக்கு வந்த பொழுது  வருத்தத்தை வெளிப்படுத்தியதாக கலைஞர் எங்களிடம் பல நேரம் சொன்னதுண்டு. ஆட்சிக்கு வந்துட்டோம் கட்சியை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்று அண்ணா சொல்லியிருக்கிறார் பல நேரங்களில். அப்படியில்லாமல் கட்சியையும், ஆட்சியையும் இரு கண்களாக காக்க வேண்டும் என்று தலைமை கழக நிர்வாகிகளையும், அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அத்தனை பேரையும் கேட்டுக்கொள்கிறேன்.

 

மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும், கழகத் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் அத்தகைய சூழ்நிலையை நாம் எப்போதும் தக்கவைத்திருக்க வேண்டும். ஒரு ராணுவ வீரனுக்கு நாட்டையும் காக்க வேண்டும் வீட்டையும் காக்க வேண்டும் என்ற இரட்டை கடமையை இருப்பதை போல நமக்கும் இரட்டைக் கடமை இருக்கிறது என்பதை நிர்வாகிகள் யாரும் மறந்து விடக்கூடாது. நமக்கு இந்தியா முழுமைக்குமான சில கடமைகள் இருக்கிறது. கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சம தர்மத்தை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் நிலைநாட்ட வேண்டும். வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சிக்கு அடிப்படை.  நாம் வளமான, வலிமையான மாநிலமாக இருப்பதால்தான் நம்மால் இவ்வளவு நன்மைகளை செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால் இந்த அளவிற்கு நன்மையை செய்ய முடியாது. ஒற்றைத் தன்மை கொண்டதாகவும், ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதையும் நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோத சட்டங்களாக இருக்கிறது. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். இவற்றை தடுக்க நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டில் இருந்தும், புதுவையில் இருந்தும் நமது கூட்டணியின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நாடாளுமன்றத்தில் நமது கட்சி இருப்பது நமக்கு பெருமை. அது தொடர இப்பொழுதே நீங்கள் களப்பணியை தொடர வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.