Skip to main content

பாமக நிறுவனர் ராமதாஸிற்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்த திமுக... அரசியலில் பரபரப்பு!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் முரசொலி மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து இருந்தார். இதன் பின்பு பாமக நிறுவனர் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். அப்படி மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவோம் என்றும் கூறினார். இந்நிலையில் முரசொலி அலுவலகமே வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது.
 

pmk



இதனையடுத்து பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் முரசொலி குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம்  வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா? என்றும், அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்? என்றும், முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா?  மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது  முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே  சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா? என்றும், அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது! என்றும் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 


இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த கருத்துக்கு பதில் கூறிய திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன், முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வெற்று சவடால்தானா” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவரய்யா டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது, பந்தயம் கட்டி படுதோல்வி அடைந்தவரின் பரிதாபத்தை பிரதிபலிக்கிறது. மேலும் தேசிய பட்டியலின- பழங்குடியின ஆணையம்”, “நீதிமன்றம்” உள்பட எங்கெங்கு ஆதாரங்களைக் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் ஆதாரங்களை நாங்கள் கொடுத்து விட்டோம். இனி, தான் சுமத்திய பொய்க் குற்றச்சாட்டிற்குப் பொறுப்பேற்று நிரூபிக்க வேண்டியது மருத்துவர் ராமதாஸ் கையில் தான் இருக்கிறது. 


அதோடு ராமதாஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, எதுவுமே இல்லாமல், “வாடகைக் கட்டிடம்” “அது இது” என்றெல்லாம் தொடர்ந்து தி.மு.கவை வம்புக்கு இழுப்பதால், “அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணிக்காக தைலாபுரத்தில் நடந்த ரகசியப் பேரம் மறந்து போகும்”, “அ.தி.மு.க ஊழல்களை திசை திருப்பலாம்” “மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு வாக்களித்து சிறுபான்மை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை எளிதில் மக்கள் மனதிலிருந்து அகற்றி விடலாம்” என்றெல்லாம் நினைத்தால்- தயவு செய்து அப்படிப்பட்ட ஒரு கனவைக் காண வேண்டாம் என்றும் இப்போதும் ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையில் வைத்துள்ள மரியாதையினால் கேட்டு கொள்கிறேன்' என்றும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்