Skip to main content

“ஐந்து மாநில தேர்தலின் போது கச்சா எண்ணெய் விலை உயரவில்லையா..” துரை வைகோ கேள்வி!     

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

"Didn't crude oil prices go up during the five state elections?" - durai vaiko

 

தேனியில் மதிமுக சார்பாக அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது‌. தேனி தனியார் விடுதியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


அதில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. விலையை கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது, நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும். இதை திரும்பப்பெற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லும் பொருட்களை தடுத்து நிறுத்தக்கூடாது. சுங்கக் கட்டணத்தை உயர்த்துவோம் என ஒன்றிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுங்கக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துரை வைகோ, “மதிமுகவை பலப்படுத்துவது தொடர்பாக அமைப்புத் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக கிளைக் கழகம் முதல் அனைத்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன். 


கரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு மரண அடியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் விலையை உயர்த்த வேண்டியதுள்ளது என்று கூறும் ஒன்றிய அரசு, ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் தான் விலையை உயர்த்தியுள்ளது. கரோனா ஊரடங்கின்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 40 டாலருக்கும் கீழ் குறைந்திருந்த போதும்கூட கலால் வரியை 70 சதவீதம் அளவிற்கு உயர்த்தி அப்போதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தத்தான் செய்ததே தவிர ஒன்றிய அரசு குறைக்கவில்லை.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகளைக் காட்டிலும் திமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது. நியூட்ரினோ திட்டத்தை முதன் முதலில் எதிர்த்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தான். அவரது எதிர்ப்பால் தான் இந்தத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரும் இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். வைகோ போராட்டத்தின் மூலம் பெற்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் நியூட்ரினோ திட்டமும் ஒன்று. 

 

சொத்து வரி உயர்வு குறித்து தமிழக முதலமைச்சரிடம் மதிமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார். சொத்து வரி உயர்வை எதிர்த்து போராடும் அதிமுகவினர், மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலை மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தியதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.