பெரியார்- ரஜினி சர்ச்சையில் அதிமுக அமைச்சர்கள் இரு வேறு நிலைபாடுகளை எடுத்திருப்பது முதல்வர் எடப்பாடியை திடுக்கிட வைத்திருக்கிறது. தமிழக அமைச்சர்கள் பலரும் பெரியார் நடத்திய பேரணி பற்றிய ரஜினியின் கருத்துக்களை கண்டித்தனர். சில அமைச்சர்கள் ரஜினியின் கருத்தை ஆதரிக்கவும் செய்தனர். இதனால், ரஜினியை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என அதிமுக மாநில நிர்வாகிகள் பலரும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
![deputy cm o paneerselvam thuglak function actor rajinikanth speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/PEgE7XINFzQP14ORdtwjZ2_7dDwRG0a4ZWFDFOMC_mc/1580023071/sites/default/files/inline-images/rajini%208.jpg)
இந்த நிலையில், ரஜினியின் பேச்சினை அழுத்தமாக கண்டித்திருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ்சின் அந்த கண்டனத்தை ரஜினியை ஆதரிக்கும் சில பத்திரிகை ஆசிரியர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் ரசிக்கவில்லை. குறிப்பாக, தேசிய அரசியலில் பாஜகவின் நலன் விரும்பியாக இருக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியரும் (ஆடிட்டர் குருமூர்த்தி அல்ல) ஓபிஎஸ்சும் நெருங்கிய நண்பர்கள்.
அந்த வகையில், ஓபிஎஸ்சை தொடர்பு கொண்ட அந்த பத்திரிகை ஆசிரியர்,‘’ பெரியாரை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் ரஜினி பேசவில்லை. குறிப்பிட்ட பத்திரிகையின் துணிச்சலை சொல்வதற்கு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணியை சுட்டிக்காட்டினாரே தவிர பெரியாரை அவமதிக்கும் நோக்கத்தில் அவர் பேசவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் ரஜினியை கண்டித்திருப்பது சரி அல்ல! ‘’என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்டு ரஜினிக்கு எதிராகப் பேச வேண்டாம் என அடக்கி வாசிக்கிறாராம் ஓபிஎஸ்!