
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 3,000க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் பயணிகளின் வசதிக்காக தனியார் பங்களிப்புடன் மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைக்கு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதன் முதல்கட்டமாக 500 தனியார் பேருந்துகளை இந்த ஆண்டு இணைத்து சென்னை மக்களுக்கு பேருந்து சேவை செய்யப்படுவதற்கான திட்டமிடல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தனியார் பேருந்துகளை மாநகரத்தில் இயக்குவது தவறு. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பணம் இல்லாது கஷ்டப்படுகிறவர்கள், பணத்தை மிச்சம் செய்ய நினைப்பவர்கள் போன்றோர் தான் அதிகமாக பேருந்தில் பயணம் செய்கிறார்கள். போக்குவரத்தை தனியாரிடம் கொடுத்தீர்களானால் பெட்ரோல் விலை ஏறினால் நானும் டிக்கெட் விலை ஏற்றுவேன் என்று சொல்வார்கள்.
அதனால் தான் சில விஷயங்களை பொது போக்குவரத்தாக வைத்துள்ளோம். அதை அரசு மட்டும் தான் நடத்த வேண்டும். தனியார் துறை கையில் எடுத்தார்களானால் சாதாரண மக்களுக்கு பேரிடியாக விழும். இவர்கள் இலவச பேருந்து என்று சொல்லும் போதே நினைத்தேன். இவங்க ஏதோ குண்டு வைக்கப் போறாங்கன்னு, அதனைத் தொடர்ந்து பெண்களை பிங்க் பேருந்துகளில் அழைத்து செல்வதாக சொன்னார்கள். அதிலும் அய்யோ இது ஆபத்து ஆச்சே என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.