Published on 29/06/2019 | Edited on 29/06/2019

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளராக வழக்கறிஞர் ஏ.சசிரேகா (பழைய வண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் தொகுதி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாததால் அக்கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலர் விலகி, அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
தொலைக்காட்சி விவாதங்களில் அமமுக சார்பில் பங்கேற்று வந்தவர் அமமுகவில் செய்தித் தொடர்பாளரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணை செயலாளருமாக இருந்த சசிரேகா. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அமமுகவில் இருந்து சற்று தள்ளியே இருந்த சசிரேகா, கடந்த 27ஆம் தேதி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு இன்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.