
ஜூன் 21 ஆம் தேதியான இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஆர்.கே கடற்கரை பகுதியில் 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 11 ஆயிரம் கடற்படை வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் பிரதமர் மோடியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், ''பல்வேறு சண்டைகள், பிரச்சினைகள், சர்ச்சைகளுக்கு யோகா தீர்வாக இருக்கிறது. பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக யோகா இருக்கிறது. எனவே ஆதாரத்தின் அடிப்படையில் யோகாவை பரிந்துரைக்கிறோம். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை கூட பல்வேறு ஆராய்ச்சிகளை செய்திருக்கிறது.
குறிப்பாக நரம்பியல், இருதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு யோகா தீர்வாக அமைகிறது. பெண்கள் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு யோகா முக்கிய தீர்வாக அமைகிறது. எனவே யோகாவை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகம் முழுவதும் அதிகம் சந்தித்து வரும் உடல் பருமன் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அன்றாட வாழ்க்கையில் எண்ணெய் உபயோகத்தை குறைக்க வேண்டும்'' என பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார்.