
தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடி ஒன்றில் விரலில் வைக்கப்படும் மை விரைவில் அழிவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.